முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இல்லத்திற்கு சென்று திடீரென சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
சென்னை: உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் இன்று மாலை திடீரென சந்தித்தார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே போட்டி நிலவுகிறது. நேற்று அதிமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தன்னையே முதல்வராக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜெயலலிதாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவன் நான்; அதிமுக அணிகள் இணைப்பின் போது இந்த ஆட்சிக்கு மட்டுமே நான் துணை முதல்வர் ஆக இருக்க ஒப்புக்கொண்டேன். ஆகையால் அடுத்த தேர்தலின் போது என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். என்னுடைய ஆட்சியை பிரதமர் மோடியே பாராட்டி உள்ளார் என்றார்.
புதிய விவசாய சட்டங்களை ஆதரித்து அதிமுக-பாஜக கூட்டம் நடத்த முடியுமா? கொங்கு ஈஸ்வரன் கேள்வி
சசிகலா முதல்வர் ஆக்கினார்
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கு பதில் அளிக்கும் போது , நம் இருவரையுமே சசிகலா தான் முதல்வர் ஆக்கினார் இதுவரை நல்லாட்சிதானே கொடுத்திருக்கிறேன். அதிமுக அரசு மீது மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. அப்புறம் ஏன் என்னுடைய தலைமையில் தேர்தலை சந்திக்கக் கூடாது? என்னையும்தான் பிரதமர் மோடி பாராட்டி இருக்கிறார் என்றார். அத்துடன் தலைமையை மாற்றினால் திமுகவின் பிரச்சாரங்களுக்கு இடம் கொடுத்தது போல ஆகிவிடும் என கூறியதாக கூறப்படுகிறது.
நல்ல முடிவு எடுங்கள்
இருதரப்பு ஆதரவாளர்களும் காரசாரமாக விவாதித்ததால் 5 மணிநேரத்துக்கும் மேலாக அதிமுக செயற்குழுக் கூட்டம் நடந்தது. அப்போது அதிமுக மூத்த தலைவர்கள் நீங்கள் இருவரும் உட்கார்ந்து பேசி நல்ல முடிவு எடுங்கள். அக்டோபர் 7-ந் தேதி வரை அவகாசம் எடுத்து கொள்ளுங்கள் என கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்கள். அக்டோபர் 7-ந் தேதியன்று முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவிப்பார்கள் என்று அதிமுக மூத்த தலைவர்கள் அறிவித்தனர்.
வைத்திலிங்கம் பேச்சு
இந்நிலையில் இன்று காலையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் சந்தித்து பேசினர். என்ன பேசினார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை எழுந்துள்ள இந்த நேரத்தில் சந்தித்து இருப்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய வைத்திலிங்கம், கட்சிக்கும் ஆட்சிக்கும் எந்த பாதிப்பு இல்லை. இப்போதைய சந்திப்பு அரசியல சந்திப்பு அல்ல. ஒற்றுமையாக அதிமுக தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.
ஈபிஎஸ் மீட்டிங்
இந்நிலையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு எவ்வளவு நேரம் நீடித்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. என்ன பேசினார்கள் என்பது குறித்தும் தெரியவரவில்லை. எனினும் அதிமுக முதல்வர் வேட்பாளர் வரும் 7 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அடுத்த கட்ட நகர்வு
ஏனெனில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தீவிர ஆதரவு தெரிவித்து வருபவர். கடந்த முறை ஒபிஎஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று மீண்டும் இணைந்த போது பேச்சுவார்த்தை நடத்தியவர். இதனால் முதல்வர் எடப்பாடி அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதித்து இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.