நெல்லை மேயரை காப்பாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு! அதிருப்தி கவுன்சிலர்களை ஆஃப் செய்தது எப்படி?
சென்னை: நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக சொந்தக் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கச்சைக்கட்டி நின்ற நிலையில் அவர்களை ஆஃப் செய்து கட்சி தலைமையை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் அதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். இதில் பெரும்பான்மையான திமுக கவுன்சிலர்கள் நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக திரும்பத் தொடங்கினர்.

இதனால் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சலசலப்பு இல்லாத நாளில்லை என்ற சூழல் உருவாகியது. இதனிடையே நெல்லை மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்கள் பலர் அமைச்சர் நேருவை கடந்த ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து முறையிட்டனர். அப்போது கவுன்சிலர்களை போங்க பேசிக்கலாம் எனக் கூறி சமாதானம் செய்து வைத்து ஊருக்கு அனுப்பி வைத்தார் அமைச்சர் நேரு.
ஆனாலும் அதன்பிறகு நெல்லை மேயர் சரவணன் மீதான அதிருப்தி குரல்கள் குறைந்தபாடில்லை. இதனால் திமுக தலைமைக்கு நெல்லையிலிருந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்தச் சூழலில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி நெல்லை மேயரை சென்னைக்கு வரவழைத்து கடுமையான டோஸ் விட்ட திமுக தலைமை அவர் மீதான புகார்களுக்கும் விளக்கம் கேட்டது.
அதுமட்டுமல்ல அப்போது அவரிடம் ராஜினாமா கடிதமும் கேட்டு பெறப்பட்டதாக ஒரு தகவல் உலா வந்தது. ஆனால் அந்த தகவலை நெல்லை மேயர் சரவணன் மறுத்துவிட்டார். இதனிடையே நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து அதிருப்தி கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு. அதைத் தொடர்ந்து 3 மாதங்கள் அமைதியாக இருந்த திமுக கவுன்சிலர்கள் இப்போது மீண்டும் நெல்லை மேயர் சரவணனை மாற்றக் கோரி போர்க்கொடி உயர்த்தினர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த விவகாரம் அதிமுகவின் பிரச்சாரத்துக்கு இடமளித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு அதிருப்தி திமுக கவுன்சிலர்களை ஆஃப் செய்யும் அசைன்மெண்டை கொடுத்தார். இதையடுத்து தனித்தனியாக கவுன்சிலர்களை அழைத்துப் பேசி அவர்களின் புகார்களையும், கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்டதுடன் சில முக்கிய உறுதிமொழியையும் அமைச்சர் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தான் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓட்டளிக்க கவுன்சிலர்கள் வரவில்லை. தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனது என்பதை போல் மேயர் சரவணன் நிம்மதி அடைந்தாலும் மாமன்றக் கூட்டங்களில் கவுன்சிலர்களின் குடைச்சல் தொடரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications