மாமனார் ஊரு.. நெகட்டிவா பேசிட்டு என் வீட்டுக்கே போக முடியாது.. டிஆர்பி ராஜா கலகல.. சிரித்த ஸ்டாலின்!
சென்னை: சட்டசபையில், திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "என் மாமனார் ஊருக்கான இந்தக் கோரிக்கைக்கு நெகட்டிவாக பேசிவிட்டு, ஊருக்கும் போக முடியாது, வீட்டுக்கும் போக முடியாது." எனக் கூறி சபையை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.
தமிழகத்தில் தொழில்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா நேற்று (ஜூன் 24) சட்டபேரவையில் உரையாற்றினார். அப்போது, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், பட்ஜெட்டில் தஞ்சை டெல்டா பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்சாலை மற்றும் திருத்துறைப்பூண்டியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார் அமைச்சர் டிஆர்பி ராஜா. அதேபோல், திருத்துறைப்பூண்டியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க 1000 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
அப்போது பேசிய திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, தனது தொகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைப்பது பற்றி பேசியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், திருத்துறைப்பூண்டி தொகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த தொழிற்பேட்டை அமைக்கப்பதற்கான திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், "திருத்துறைப்பூண்டிக்கு பல பெருமைகள் இருக்கின்றன. அமைச்சர் டிஆர்பி ராஜாவை எங்கள் தொகுதியின் மருமகனாக ஏற்றது எங்களுக்குப் பெருமையானது. அந்தப் பெருமைக்கு மகுடம் சூட்டும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து அவருக்கு பதிலளித்த அமைச்சர் டிஆர்பி ராஜா, "மாமனார் ஊருக்கான தேவை பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வியை கேட்டு சட்டமன்ற உறுப்பினர் என்னை இக்கட்டான சூழ்நிலையில் தள்ளி இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினரின் இந்தக் கேள்விக்கு நெகட்டிவாக பேசிவிட்டு, ஊருக்கும் போக முடியாது, வீட்டுக்கும் போக முடியாது.
மாண்புமிகு தொழில், முதலீட்டு. ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்களின் சட்டப் பேரவை கேள்வி நேர உரை!#திராவிட_மாடல் pic.twitter.com/AT2AbmyeEB
— Office Of Dr.TRB Rajaa (@OfficeOfTRBR) June 24, 2024
நல்லவேளையாக திருத்துறைப்பூண்டியில் ஏற்கனவே சிப்காட் தொழிற்சாலை அமைத்து முதல்வர் ஸ்டாலின் என்னை காப்பாற்றி விட்டார்." என அமைச்சர் டிஆர்பிர் ராஜா தெரிவித்தார். அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியதை கேட்டு முதல்வர் ஸ்டாலினும் சட்டென சிரித்தார். சட்டப்பேரவையே சிரிப்பலையில் ஆழ்ந்தது.
மேலும், பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, கொற்கை பகுதியில் புதியதாக இணைப்பு சாலைகள் போடப்படுவதற்கான திட்டம் இருப்பதாகவும், அந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் அப்பகுதி மக்களுக்கு வெகு விரைவில் நற்செய்தி கிடைக்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications