இனிதான் சவாலே.. மைனாரிட்டி அரசு.. விஜய்யால் முதல்வராக பெரிதாக எதுவுமே செய்ய முடியாது? ஏன் தெரியுமா?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரியணையில் ஏறுகிறார். ஆனால், அவரின் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சவாலும், அரசியல் நெருக்கடியும் காத்திருப்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அந்த ஆதரவு அனைத்தும் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளிடம் இருந்தே கிடைத்துள்ளது என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்க விஷயம்.
"கூட்டணி தர்மம்" - விஜய்யின் கரங்களைக் கட்டுமா?
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அவர்கள் இப்போதும் திமுக கூட்டணியில்தான் இருக்கிறார்கள். விஜய் தனது அரசியல் வருகையின் போது "ஊழலற்ற நிர்வாகம்" மற்றும் "பழைய அரசியல் முறைகளுக்கு மாற்றம்" என்பதைத் தான் பிரதான முழக்கமாக முன்வைத்தார். குறிப்பாக, கடந்த கால திமுக ஆட்சியின் குறைபாடுகளையும், சில அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களையும் தவெக கடுமையாக விமர்சித்து வந்தது. ஆனால், இப்போது அதே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் தயவில்தான் விஜய் முதல்வர் நாற்காலியில் அமரப்போகிறார்.

இது விஜய்க்கு ஒரு 'மென்மையான அரசு' (Soft Government) என்ற பிம்பத்தையே ஆரம்பத்திலேயே உருவாக்கிவிடும் என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால் விஜய் அமைப்பது பெரும்பான்மை இல்லாத மைனாரிட்டி அரசு. கூட்டணி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும் என்ற நிலையில், விஜய் தன்னிச்சையாக எந்தவொரு அதிரடி முடிவையும் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கை: கேள்விக்குறி?
தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக முக்கியப் புள்ளிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் மீதான புகார்கள் குறித்து விஜய் தரப்பு பேசியிருந்தது. பொதுவாக ஒரு புதிய ஆட்சி அமைந்தால், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் குறித்து விசாரணை கமிஷன் அமைப்பதும், நடவடிக்கை எடுப்பதும் வழக்கம். ஆனால், விஜய்யின் தற்போதைய நிலையை பார்த்தால், அவரால் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது கை வைக்க முடியுமா என்பது சந்தேகமே.
ஏனெனில், விஜய்க்கு ஆதரவு அளித்துள்ள விசிக, சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் நீண்டகாலமாக திமுகவுடன் நெருக்கமான பிணைப்பில் இருப்பவை. ஸ்டாலின் சொல்லித்தான் இவர்கள் விஜய்க்கு ஆதரவே அளித்துள்ளனர். இத்தகைய சூழலில், திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது விஜய் ஆக்ஷன் எடுக்க முயன்றால், இந்த கூட்டணி கட்சிகள் நிச்சயம் 'லாபி' செய்யும். "எங்களை ஜெயிக்க வைத்தது திமுக, அவர்களுக்கு எதிராக நீங்கள் எப்படி நடவடிக்கை எடுக்கலாம்?" என்ற அழுத்தம் கூட்டணி கட்சிகளிடம் இருந்து வரும்போது, விஜய் அமைதி காக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.
ஆக்சன்களை விடுங்கள் விஜயால் திமுக கொள்கைக்கு எதிராக பிஎம் ஸ்ரீ போன்ற திட்டங்களில் கூட கையெழுத்து போட முடியாது. அதையும் கூட்டணிகள் தடுக்கும் சாதகம் உள்ளது.
ஸ்டாலின் விரித்த 'அன்பு' வலை?
ஸ்டாலின் தனது கூட்டணிக் கட்சிகளை விஜய்க்கு ஆதரவு அளிக்கச் சொன்னதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய ராஜதந்திரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய்க்கு ஆதரவு தந்து அவரை முதல்வராக்குவதன் மூலம், அவர் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி முடக்கிவிடலாம் என்பது ஒரு கணக்காக இருக்கலாம். இதன் மூலம், விஜய் ஒரு "பொம்மை முதல்வராக" அல்லது கூட்டணிக் கட்சிகளின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்ட ஒருவராகவே நீடிக்க வாய்ப்புள்ளது.
நிர்வாகத்தில் பின்னடைவு ஏற்படுமா?
ஒரு முதல்வர் சுதந்திரமாகச் செயல்படும்போது மட்டுமே லஞ்ச ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுக்க முடியும். ஆனால், ஒவ்வொரு கோப்பிலும் கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதலுக்காகவும், அவர்களின் 'லாபி'க்காகவும் விஜய் காத்திருக்க வேண்டியிருந்தால், அது தவெக-வின் தனித்துவத்தைப் பாதிக்கும். ஆனால், "மென்மையான அணுகுமுறை" என்பது அவரது அரசியல் எதிர்காலத்திற்கே சவாலாக முடியலாம்.
விஜய்க்கு கிடைத்த வெற்றியா? அல்லது நெருக்கடியா?
பதவியேற்பு விழா களைகட்டினாலும், விஜய்யின் முன்னால் இருப்பது பூப்பாதை அல்ல; அது முட்கள் நிறைந்த பாதை. திமுகவின் நிழல் கலந்த இந்தக் கூட்டணியை வைத்துக்கொண்டு, அவர் எப்படித் தனது அரசியல் வாக்குறுதியை நிறைவேற்றப்போகிறார்? முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து அவர் மவுனம் காப்பாரா அல்லது துணிச்சலாகக் களம் இறங்குவாரா? இந்த கேள்விகளுக்கான பதில் இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். ஒருவேளை கூட்டணி கட்சிகளின் அழுத்தத்திற்குப் பணிந்தால், இது ஒரு "தற்காலிக வெற்றி"யாக மட்டுமே விஜய்க்கு அமையும்.












Click it and Unblock the Notifications