Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மழை எச்சரிக்கை.. வானிலை மையம் vs தனியார் ஆர்வலர்கள்.. முரண்படும் அறிவிப்பு.. குழம்பும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வலுவிழக்க வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

வானிலை முன்னறிவிப்பில் வெளியாகியுள்ள இந்த முரண்பட்ட தகவல்கள் மக்களை குழப்பும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக இன்று சென்னையில் வானிலை மையம் கணித்ததை விட அதிகனமழை பெய்ததும் வானிலை மையம் துல்லியமாக கணிக்க தவறுகிறதா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

mixed-rain-alerts-from-imd-and-private-forecasters-create-public-confusion

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. அப்போதே தமிழகம் முழுக்க கனமழை வெளுத்து வாங்கியது. அதன்பிறகு நவம்பர் மாத தொடக்கத்தில் பெரிய அளவில் மழை இல்லாமல் இருந்து. பின்னர் நவம்பர் மாதத்தில் 15 ஆம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்து உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சீராக மழை பெய்ய தொடங்கியது.

இதனை ஆரம்பத்தில் இருந்தே தனியார் வானிலை ஆய்வாளர்களான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் ஆகியோர் கூறி வந்தனர். அடுத்தடுத்து 3 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இதில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என்று கணித்து இருந்தார். இதனால் சென்னையில் நல்ல மழை இருக்கும் என்றும் கணித்து இருந்தார்.

ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்

அதன்படியே வங்கக் கடலில் டிட்வா புயல் உருவாகி தமிழகத்தில் பரவலாக மழையை கொடுத்தது. சென்னையிலும் தற்போது கனமழை கொட்டி வருகிறது. இதில் சென்னை வானிலை ஆய்வு மையமும் ஒரு வாரத்திற்கான அப்டேட்களை தினமும் மதியம் கொடுத்து வருகிறது. அதிலும் சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என கணித்து இருந்தது.

குறிப்பாக நேற்று சென்னையில் டிட்வா புயலால் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. ஆனால் பெரிய அளவில் மழை பெய்யாமல், ஒருசில இடங்களில் வெயிலும் அடிக்க தொடங்கிவிட்டது. இதனால் நேற்று மாலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் வாபஸ் பெற்றது. வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வாபஸ் பெற்ற சில மணி நேரங்களில் மீண்டும் சென்னையில் மழை கொட்ட ஆரம்பித்தது.

முரண்பட்ட தகவல்கள்

இன்று கனமழை அறிவிப்பு மட்டுமே வானிலை மையம் சார்பில் விடப்பட்டு இருந்தது. இதனால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு கூட விடுமுறை விடப்படவில்லை. அதுவரை தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வந்தது. ஆனால் இன்று காலையில் இருந்தே கனமழை கொட்டத் தொடங்கியது. இன்று பகலில் வெளியிட்ட வானிலை அறிவிப்பிலும் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்டே விடப்பட்டு இருந்தது.

ஆனால் சென்னையில் மழை விடாமல் கொட்டியது. பள்ளி சென்ற மாணவ மாணவிகளும் வீடு திரும்ப முடியாமல் திணறினர். இந்த நிலையில் பிற்பகலில் மீண்டும் சென்னையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. அதே சமயம் வானிலை ஆய்வு மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையக் கூடும் என்று கூறிய நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர்கள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

வானிலை மையம் கூறியிருப்பதாவது:-

"இன்று காலை தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வடதமிழகம் புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காலை 11.30 மணியளவில் அதே பகுதிகளில் சென்னைக்கு கிழக்கே 50 கிமீ தொலைவில் நிலைகொண்டிருந்தது.

தாழ்வு மண்டலமாக வலுக்குறையக் கூடும்

இது இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவடையும். இது தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து செல்லக்கூடும். அதன் பின்னர் அடுத்த 12 மணி நேரத்தில் வட திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையக் கூடும்.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கும் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

நாளை 2 ஆம் தேதி அன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறியதாவது:-

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு இல்லை. அடுத்த 24 மணி நேரத்திற்கு அதாவது நாளை மாலை வரை சென்னைக்கு அருகிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தொடரும்.

இதன் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூரில் நாளை காலைக்குள் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார். வானிலை முன்னறிவிப்பில் வெளியாகியுள்ள இந்த முரண்பட்ட தகவல்கள் மக்களை குழப்பும் வகையில் அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+