பெரியார் ஒரு உலகத்தலைவர்... தமிமுன் அன்சாரி பேச்சு
சென்னை: பெரியார் ஒரு உலகத்தலைவர் என்றும், அவர் தமிழகத்தில் பிறந்த காரணத்தால் குறுகிய வட்டத்திற்குள் மட்டும் அவர் கொண்டாடப்படுவதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பிறந்தவிழா நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பெரியார் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி பேசினார்.

சிலை வழிபாட்டில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், சிலைகளை மதிப்பவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் எனக் கூறினார். சமீபகாலமாக பெரியாரின் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்கதையாகி வருவதாக வேதனை தெரிவித்த அவர், பெரியாரின் சிலைகளை மட்டும் உடைக்கவில்லை, அவரின் கொள்கைகளையும் உடைப்பதால் தான் அதனை எதிர்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், பெரியார் ஐரோப்பிய நாடுகளிலோ, அமெரிக்காவிலோ பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உலகத் தலைவராக போற்றப்பட்டிருப்பார் என்றும், அதுகூட வேண்டாம் இங்கிருக்கும் டெல்லியில் பிறந்திருந்தால் கூட பெரியார் இந்தியத் தலைவராக போற்றப்பட்டிருப்பார் எனவும் கூறினார். தமிழகத்தில் அவர் பிறந்த காரணத்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் போற்றப்படுவதாக தெரிவித்தார்.
பெரியாரின் நூல்களை அனைத்து நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த தமிமுன் அன்சாரி, பெரியாரின் தத்துவங்களை அனைத்து நாட்டு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை கடந்து, சமூக நீதிக்காக அவர் நடத்திய போராட்டம் காரணமாகவே அவரை போற்றுவதாக தமிமுன் அன்சாரி விளக்கம் அளித்தார். பெரியார் அரசியல்வாதியல்ல அவர் ஒரு சமூக சீர்த்திருத்தவாதி என புகழாரம் சூடினார்.












Click it and Unblock the Notifications