அவசரப்படாதீங்க.. விசிக – 2 கம்யூனிஸ்ட்டுக்கு ஸ்டாலின் கூறிய மெசேஜ்! அப்போ விஜய்க்கு ஆதரவு இல்லையா?
சென்னை: தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளதால் விஜய், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவிடம் ஆதரவு கேட்டுள்ளனர். இவர்கள் இன்று ஆலோசனை நடத்தி முடிவை அறிவிக்க உள்ள நிலையில் ஸ்டாலின் முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளார். இதனால் ஸ்டாலினை தாண்டி அவர்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிப்பார்களா? என்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மெஜாரிட்டி இன்றி விஜய் ஆட்சியை பிடிக்க தவித்து வருகிறார். மெஜாரிட்டிக்கு இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவை. இதனால் திமுக கூட்டணியில் உள்ள விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தலா 2 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 6 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இதனால் இந்த 3 கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரியுள்ளார். 3 கட்சிகளின் தலைவர்களுக்கும் விஜய் ஆதரவு கோரி கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி திருமாவளவனை செல்போனில் தொடர்பு கொண்டு விஜய் ஆதரவு கேட்டுள்ளார்.
3 கட்சிகள் இன்று முடிவு
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரை தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். இதையடுத்து 3 கட்சிகளும் இன்று நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தவெகவை ஆதரிப்பதா? இல்லையா? என்ற முடிவை அறிவிக்க உள்ளனர்.
இதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் செயற்குழு கூட்டத்தையும், விசிக உயர்மட்ட குழு கூட்டத்தையும் இன்று ஏற்பாடு செய்துள்ளது. இந்த 3 கட்சிகளின் ஆதரவு கிடைத்துவிட்டால் விஜய்க்கு எளிதாக மெஜாரிட்டி கிடைக்கும். அவரால் எளிதாக முதல்வராக முடியும். இதனால் இந்த மீட்டிங் இன்று தவெகவினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஸ்டாலின் அனுப்பிய மெசேஜ்
இந்நிலையில் தான் ஆலோசனை கூட்டத்துக்கு முன்பாக 3 கட்சிகளுக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். அதில், ''அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் திமுகவிற்கு 'ஓகே' தான்'' என்று கூறியுள்ளார்.
நேற்று நடந்த மீட்டிங்
முன்னதாக நேற்றைய தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், விசிக தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் சென்னையில் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போதும் திமுக கூட்டணியிலேயே தொடர வேண்டும். கூட்டணியை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி விஜய் மெஜாரிட்டியை நிரூபிக்காவிட்டால் அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோருவது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் அதில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
பெரும் எதிர்பார்ப்பு
இப்படியான சூழலில் 3 கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று அதிக கவனம் பெற்றுள்ளது. ஸ்டாலின் சொன்னதை கேட்டு 3 கட்சிகளும் திமுக கூட்டணியில் தொடருமா? இல்லாவிட்டால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி ஆதரவு நிலைப்பாட்டை எடுக்குமா? என்பது தான் இன்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications