அப்படியா?.. எனக்கு தெரியாதே?.. உங்களுக்கு யார் சொன்னது?.. செய்தியாளர்களை கேள்வி கேட்ட ஸ்டாலின்!
Recommended Video
சென்னை: எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது என உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) யார் சொன்னது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத் தேர்தல் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முடிவு செய்துவிட்டன. இதனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து காங்கிரஸ் அணுகி வருகிறது.
இந்த நிலையில் பாஜக கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பெரும் இழுபறி நிலவி வருகிறது.
Exit polls: மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ்.. மற்ற கட்சிகளையும் கெடுத்துவிட்டதுதான் மிச்சம்
பதவி வேண்டாம்
ராகுலை பிரதமராக்க சில கட்சிகள் முன்வரவில்லை. எனினும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதால் காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிகூட வேண்டாம் என இறங்கி வந்துள்ளது.
தகவல்
பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்த சோனியா தலைமையில் 21-ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. இதையடுத்து 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று கூட்டம் நடைபெறும் என உறுதிப்படாத தகவல்கள் கூறின.
கேள்வி எழுப்பிய ஸ்டாலின்
இந்த நிலையில் இதுகுறித்து முக ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் மே 23ல் டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது என்று உங்களுக்கு யார் சொன்னது என்று செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.
சந்திரபாபு நாயுடு
தொடர்ந்து பேசிய அவர், மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி, மே 23ஆம் தேதிக்கு பிறகு தெரிவிக்கப்படும். தற்போதைய தேர்தல் சூழலை ஒட்டி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கிறார். சந்திரபாபு நாயுடு பலமுறை என்னை சந்தித்து பேசியுள்ளார் என ஸ்டாலின் தெரிவித்தார்.