செங்கல் செங்கல்லாக.. எடப்பாடி கட்டிய கனவு கோட்டையை.. பிரித்து எடுத்த ஸ்டாலின்.. சரமாரி சம்பவம்!
சென்னை: தமிழ்நாடு அரசியலில் 2026 சட்டசபை தேர்தலுக்காக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கட்டிய கனவு கோட்டை ஒன்றை முதல்வர் ஸ்டாலின் பிரித்து எடுத்துள்ளார். கிட்டத்தட்ட பாஜக - அதிமுகவின் என்டிஏ கூட்டணியை செதில் செதிலாக ஸ்டாலின் உடைத்து இருக்கிறார்.
கடந்த சில நாட்களில் தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 வருடம் கூட இல்லாத நிலையில், அடுத்தடுத்து அதிமுகவை உலுக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்து உள்ளன.

ஸ்டாலின் உடைத்த முதல் செங்கல் - அன்வர் ராஜா
அதிமுகவின் மிக முக்கியமான இஸ்லாமிய முகம்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தென்மாவட்டங்களில் அதிமுகவின் இஸ்லாமிய முகம்களில் முக்கியமானவராக இருந்தவர் அன்வர் ராஜா. அன்வர் ராஜா இஸ்லாமியர்கள் இடையே அரசியல் கடந்தும் கூட பெரிய மதிப்பையும் பெற்று இருந்தார். அதிமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதை நேரடியாகவும், மறைமுகமாகவும் இவர் கடுமையாக எதிர்த்து வந்தார். 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அன்வர் ராஜா, அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், சசிகலாவுக்கு ஆதரவு என்றும் சமீபத்தில் தெரிவித்தார். எடப்பாடியை விமர்சனம் செய்யும் விதமாக சசிகலாவிற்கு ஆதரவாக பேசினார். எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம் வைத்ததையடுத்து, 2021-ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 2023ல் மீண்டும் அதிமுகவில் இணைந்தவர் இப்போது மீண்டும் அதிமுகவின் பாஜக கூட்டணியை எதிர்த்து திமுகவில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே பாஜக கூட்டணி காரணமாக அதிமுக மீது இஸ்லாமியர்கள் பலர் அப்செட்டில் இருக்கும் நிலையில்தான் திமுக பக்கம் ஐக்கியம் ஆகி உள்ளார் அன்வர் ராஜா. இதனால் இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரவையும் எடப்பாடி இழக்கும் சூழல் உள்ளது. ஏற்கனவே டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம், சசிகலா உடன் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள மோதல் காரணமாக முக்குலத்தோர் வாக்குகள் எடப்பாடிக்கு கிடைப்பது இல்லை. அதிமுக முக்குலத்தோர் வாக்குகளை இழந்து தென் மண்டலத்தில் கடுமையாக சிரமப்பட்டு வருகிறது. இப்போது இஸ்லாமியர்கள் வாக்குகளும் பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
ஸ்டாலின் உடைத்த இரண்டாவது செங்கல் - ஓ பன்னீர்செல்வம்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்..

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நேற்று காலையில் முதல்வர் ஸ்டாலினை (O Panneerselvam Stalin meets) சந்தித்து பேசினார். காலையில் நடைப்பயிற்சி சென்ற போது முதல்வர் ஸ்டாலினை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு குறித்து நேற்று ஓ பன்னீர் செல்வம் முக்கியமான முடிவை வெளியிடுவதாக கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்றார் ஓபிஎஸ். அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து வரவேற்றார். ஸ்டாலின் ஓபிஎஸ் இடையேயான சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் சில முக்கிய தெரிவித்தார். கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்த பிறகு பாஜக தரப்பு பேசினார்களா என்ற கேள்வி, "இல்லை" என்று ஒரே வார்த்தையில் மட்டும் ஓபிஎஸ் பதிலளித்தார். ஓ பன்னீர்செல்வம் முடிவால் அதிமுக கூட்டணிக்கு தென் மண்டலத்தில் வர வேண்டிய முக்குலத்தோர் வாக்குகள் கடுமையாக சரியும். அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் முக்குலத்தோர் கடுமையாக அதிர்ச்சி அடையும் வாய்ப்புகள் உள்ளன.
ஸ்டாலின் உடைத்த மூன்றாவது செங்கல் - பிரேமலதா
சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேற்று காலை செல்வதற்கு முன்பு, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இல்லத்திற்கு வருகை தந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், பிரேமலதா விஜயகாந்த் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், சமீபத்தில் மறைந்த தி.மு.க.வின் மூத்த தலைவர் மு.க. முத்துவின் மறைவுக்கும் முதல்வர் ஸ்டாலினிடம் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் உடனிருந்தனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்த கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக இதுவரை எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேமுதிக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தது இருந்தார்.
இவரும் அதிமுக பக்கம் செல்லாமல் திமுக பக்கம் வந்திருப்பது அதிமுகவிற்கு பெரிய சவுக்கடியாக மாறி உள்ளது. விஜயகாந்த் முகம் மற்றும் சாதி பின்புலம் பார்த்து வாக்களித்த 2-4 சதவிகித வாக்குகள் இதனால் அதிமுகவிற்கு கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.












Click it and Unblock the Notifications