அதிமுக யாகம் நடத்துவது தண்ணீர் பிரச்சினைக்காகவா?.. இல்லை.. இல்லை... ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
சென்னை: அதிமுக யாகம் நடத்துவது தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அல்ல என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் குடிநீருக்காக தினந்தோறும் நடையாய் நடக்கின்றனர். இந்த நிலையில் மழை வேண்டி அதிமுக கோயில்களில் யாகம் நடத்தி வருகிறது.
அதே வேளையில் மறுபக்கம் திமுக நேற்று முன் தினம் தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் இன்றைய தினம் ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட காரணம் என்ன?.. வானிலை ஆய்வு மைய இயக்குநர் பரபரப்பு விளக்கம்
குடிநீர் திட்டம்
அப்போது காலிக் குடம் இங்கே, தண்ணீர் எங்கே என முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில் அதிமுக 8 ஆண்டு கால ஆட்சியில் ஒரு குடிநீர் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
பதவியை காப்பாற்ற
தண்ணீர் பஞ்சம் பற்றி, எடப்பாடி, ஓபிஎஸ் கவலைப்படவில்லை. நீர்மட்டம் குறைந்தபோதே, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இவர்கள் கோயில்களில் யாகம் நடத்துவது தண்ணீருக்காக அல்ல, தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே.
திமுக ஆட்சி
அதிமுக யாகம் நடத்துவதை தவறு என கூறவில்லை. மழைக்காக முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று தான் கூறுகிறேன். தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. விரைவில் திமுக ஆட்சி அமையும்.
முதல்வர்
சபாநாயகரை நீக்குவதை விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைதான் நீக்க வேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் முறைகேடுகள் குறித்து திமுக ஆட்சியில் விசாரிக்கப்படும். முறைகேட்டில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை யாருக்கு தொடர்பிருந்தாலும் விசாரிக்கப்படும். உள்ளட்சி துறையை ஊழல் ஆட்சித் துறை என்று தான் அழைக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.