முரசொலியில் சரமாரி விமர்சனம்.. ஒரே மேடையில் கமலுடன் சகஜமாக பேசிய மு.க.ஸ்டாலின்
Recommended Video
சென்னை: முரசொலியில் கமல்ஹாசனை சரமாரியாக விமர்சனம் செய்த நிலையில் இன்று சென்னையில் நடந்த திருமணத்தில் ஒரே மேடையில் கமலும் ஸ்டாலினும் அருகருகே அமர்ந்து பேசினர்.
நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என கமல்ஹாசனை கேட்டபோது பேசி கொண்டிருக்கிறோம், பிறகு சொல்கிறோம் என கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்தார்.
மேலும் இந்த முடிவின் பின்னணி என்ன என கேட்ட போது திமுகவின் ஊழல் பொதியை சுமக்க நாங்கள் தயாராகயில்லை என தெரிவித்தார். இது திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஊழல் கட்சி
இந்த நிலையில் கமல்ஹாசனை விமர்சனம் செய்து முரசொலி நாளிதழில் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அவர் பொதி சுமக்கும் கழுதை என்றும் மருதநாயகம் படப்பிடிப்பை கருணாநிதியை விட்டு தொடங்கி வைக்க சொல்லும் போது திமுக ஊழல் கட்சி என தெரியவில்லையா?
பாஜக பின்புலம்
தற்போது பாஜகவின் சொல் கேட்டு கமல்ஹாசன் பேசுகிறார் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. இந்த நிலையில் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமல் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை
அப்போது அரசியல் மனமாச்சரியங்களைத் தாண்டி ஸ்டாலின், கமல்ஹாசன் சகஜமான முறையில் உரையாடினர். திமுக காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் பேச்சுவார்த்தை நடத்தியது.
கருத்துகள்
அதில் அதிக இடங்களை தங்களுக்கு ஒதுக்காமல் வெறும் 2 அல்லது 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திமுக கூறியதால்தான் இது போல் கமல் அக்கட்சியை விமர்சனம் செய்ததாக கருத்துகள் எழுந்துள்ளன.