இலங்கை சுதந்திர தினம்: தமிழில் தேசிய கீதம் இல்லை- இந்தியா கண்டனம் தெரிவிக்க ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு அந்நாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவியேற்ற பின்னர், சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமாட்டாது என அறிவித்தார். இதற்கு இலங்கை தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் இலங்கை அரசின் போக்கு கண்டனம் தெரிவித்தும் இருந்தனர். இந்நிலையில் இன்று இலங்கையின் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
ஆனால் வழக்கமாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கைவிடப்பட்டிருந்தது. இதற்கு உலகத் தமிழர்கள் கடும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடாமல் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) February 4, 2020
இந்தியா வந்த இலங்கை அதிபரை வரவேற்று நிதியுதவி அளித்தது இதற்காகவா? இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்து வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவிக்க பிரதமர் உத்தரவிட வேண்டும். pic.twitter.com/1UyyQOD86t
திமுக தலைவர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடாமல் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா வந்த இலங்கை அதிபரை வரவேற்று நிதியுதவி அளித்தது இதற்காகவா? இலங்கைத் தூதரை உடனடியாக அழைத்து வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவிக்க பிரதமர் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.