பட்டாசு ஆலை வெடி விபத்து: ஓ.பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும், விபத்துகள் தொடராமல் தடுப்பதும் அவசியம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் மாரியம்மாள் என்ற பட்டாசு ஆலை இயங்கி வந்தது. அந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் அறையில் இருந்து திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் ஒரு அறை முற்றிலும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
15 பேர் சாவு
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.30-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். இதனால் மொத்தம் 15 பேர் இறந்துள்ளனர்.
அதிர்ச்சி
சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேர் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளி விடுமுறை முடிந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனவேதனை அடைந்தேன்
இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'விருதுநகர்-சாத்தூரில் இன்று நிகழ்ந்த தனியார் பட்டாசுஆலை வெடிவிபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு காயமுற்றோர் விரைவில் பூரணநலம்பெற இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் 'சாத்தூர் - அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பள்ளி மாணவி உட்பட 11 பேர் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்ந்த இரங்கல்! இதுபோன்ற விபத்துகள் இந்த ஆட்சியில் சாதாரணமாகி விட்டது! உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும், விபத்துகள் தொடராமல் தடுப்பதும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.