“தென்றலாக இருக்கும் தெற்கை புயலாக மாற்றாதீர்கள்".. மத்திய பாஜக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: "5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்? தொகுதி மறுவரையறை விஷயத்தில் சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா நகர்கிறதா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16 ஆம் தொடங்குகிறது. இதற்கு தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!
🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்!
🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?
🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன?
🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?
🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்து ஆலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?
🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?
🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்!
நாங்கள் கேட்பது நியாயமான தொகுதி மறுவரையறை" எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications