“மோடியின் பொய்”.. பாஜகவின் அடையாளமே.. மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு
சென்னை: உத்தரப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பாஜகவை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி டெல்லியில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், "தங்கள் சாதனைகளால் நாட்டிற்கே பெருமை தேடித் தந்த நமது மற்போர் வீரர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பெரும் அநீதியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பெண்களுக்கு அதிகாரமளிப்பதைப் பற்றி நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறார்.

ஆனால் அவரது பொய் வாக்குறுதிகளுக்கு முரணாக, கத்துவா, உன்னாவ், ஹாத்ரஸ், பில்கிஸ் பானு எனப் பல வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோருக்குத் தொல்லையளிப்பதும், குற்றம்சாட்டப்பட்டோரைப் பாதுகாப்பதுமே பா.ஜ.க.வின் அடையாளமாக இருக்கிறது. நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பாஜகவை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் என்பவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த பயிற்சி பெற்று வரும் இளம் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதமே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்திய நிலையில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் விசாரணை குழு ஒன்றையும் அமைத்தது. வீரர்கள் தொடக்கத்தில் இந்த குழு மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிட்டார்கள்.
ஆனால், 3 மாதங்கள் கடந்த பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மீண்டும் அதே டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் மல்யுத்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் இவர்களை நேரில் சந்தித்து ஆதரவளித்து உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி ஜந்தர் மந்தர் பகுதிக்கு நேரில் சென்று மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தார். அதேபோல் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும் மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் நேற்று அவர்களுக்காக போராட வந்த மாணவிகளை டெல்லி போலீஸ் பலப்பிரயோகம் செய்து அப்புறப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.












Click it and Unblock the Notifications