கொளத்தூரில் வாக்காளர்களுக்கு நன்றி கூறிய ஸ்டாலின்.. கண்கலங்கியபடி நின்ற சேகர் பாபு
சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியை தழுவிய நிலையில் இன்று தொகுதி மக்களை சந்தித்த ஸ்டாலின், தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது உடன் இருந்த சேகர் பாபு கண்கலங்கியபடி காட்சி அளித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தவெக 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. விஜய் அலையில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினே தோற்கும் நிலை ஏற்பட்டது. கொளத்தூரில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு மு.க.ஸ்டாலினை தோற்கடித்தார்.

தேர்தலில் வெற்றி தோல்வி தனக்கு புதிது அல்ல என்றும், தோற்றாலும் எதிர்க்கட்சியாக மக்கள் பணி தொடரும் என்று ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஸ்டாலின் இன்று நன்றி தெரிவிக்க சென்றார். திறந்த வேனில் நின்றபடி கொளத்தூர் மக்களுக்கு தனது நன்றியை கூறினார்.
அப்போது அருகில் இருந்த சேகர் பாபு கண்கலங்கினார். வரவேற்கிறோம்.. வரவேற்கிறோம்.. வாழிய வாழிய வாழியவே என்று கோஷம் எழுப்பி திமுகவினர் ஸ்டாலினை வரவேற்றனர். ஸ்டாலினும், கொளத்தூர் தொகுதி மக்களை பார்த்ததும் சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்
கடந்த 1989, 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றார். பின்னர் கொளத்தூர் தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த ஸ்டாலின், இந்த முறையும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.












Click it and Unblock the Notifications