பரூக் அப்துல்லா, தோழர் நல்லகண்ணுக்கு கொரோனா பாதிப்பு.. விரைவில் நலம் பெற வேண்டும்... ஸ்டாலின் ட்வீட்
சென்னை: தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் குணம் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது பரவும் மரபணு மாறிய கொரோனா இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவரது மகன் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இச்செய்தியை அறிந்து வருத்தமுற்றதாகவும் பரூக் அப்துல்லா விரைந்து நலம்பெற விழைகிறேன் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணுவுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பெரிதும் கவலையுற்றேன். அவர் விரைந்து நலம்பெற்று, மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என விழைகிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.