குடியரசு தின விழா! காந்தியடிகளுக்கு பிடித்த பாடலை நீக்குவதா? மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
சென்னை: குடியரசு தின விழா நிகழ்வின் இறுதியில் பாசறைக்குத் திரும்பும் அணிவகுப்பின் போது இசைக்கப்படும் 'அபைட் வித் மீ' பாடலை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளா மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான பாடல் அபைட் வித் மீ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அபைட் வித் மீ
குடியரசு தின விழா நிகழ்வுகளின் இறுதியில் பாசறைக்குத் திரும்பும் அணிவகுப்பில் இசைக்கப்படும் 'அபைட் வித் மீ' என்று காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான பாடலை நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். 1950ம் ஆண்டு முதல் விஜய் சௌக் பகுதியில் ஜனவரி 29 அன்று நடைபெறும் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வில் 'அபைட் வித் மீ' இசைக்கப்பட்டு வந்துள்ளது.

71 ஆண்டுகள்
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான பாடல் என்பதால் தான் 1950ல் இந்த பாடல் பாசறைக்கு திரும்பும் முப்படைகளின் அணிவகுப்பில் சேர்க்கப்பட்டு கடந்த 71 ஆண்டுகளாக இசைக்கப்பட்டு வந்துள்ளது. இந்தப் பாடல் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். வீர ஈகியர்களான நமது படைவீரர்களை நினைவு கொள்வதற்காகவே இந்த பாடல் இசைக்கப்படுகின்றது.

காந்தியடிகள்
காயப்பட்ட உள்ளங்களை தேற்றுவதைத் தான் இந்தப் பாடல் வெளிப்படுத்துகின்றது. இந்தப் பாடலை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைப்பது ஒன்றிய அரசின் குறுகிய பார்வையை வெளிப்படுத்துகின்றது. கோட்சேவைப் புகழும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள பாஜக காந்தியடிகளை புறந்தள்ள எடுத்துவரும் பல மறைமுக முயற்சிகளில் ஒன்றாகவே இந்தப் பாடல் நீக்க முடிவும் அமைந்துள்ளது.

கோட்சே சாய்வு
முப்படைகளின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் பாலிவுட் பாடல் ஒன்றுக்கு கடற்படை வீரர்கள் நடனமாடி இசைக்கும் பாடல் அணிவகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் இணையதளம் அளிக்கும் தகவல் மோடி அரசின் தராதரத்தை அம்பலப்படுத்துகின்றது. காந்தியடிகளுக்குப் பிடித்தமான பாடல் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என கோட்சே சாய்வு ஒன்றிய அரசை இந்திய மக்களின் சார்பில் வலியுறுத்துகிறோம்.












Click it and Unblock the Notifications