உழைப்பவன் வியர்வை உலரும் முன்பே கூலி தர வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி மே தின வாழ்த்து!
சென்னை: உழைப்பாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட உறுதி எடுத்துக்கொள்வோம் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது;
உழைப்பாளிகளின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் உன்னதத் திருநாளாம் மேதினத்தில் தொழிலாளர் சமுதாயத்திற்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழைப்புக்கேற்ற ஊதியம் எட்டு மணி நேர வேலை போன்றவற்றை முன்வைத்து எழுந்தபோராட்டத்தின் வெற்றி தினமே மே தினம்.
தொழிலாளர்களின் உழைப்பு திறன்தான் உலகத்தின் மூலதனம் என்பதனை பறைசாற்றிய நன்னாள்.1886 தொடங்கி 136 ஆண்டுகளாக மே தினம் உணர்வுப் பூர்வமாகஉலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்தியத் திருநாட்டின் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர்களின் நிலையை உயர்த்திவகுப்புவாத சக்திகளையும் தனியார் மயம் மூலமாக மக்களின் உழைப்பைச் சுரண்டிக்கொழுக்கும் அதிகார சக்திகளையும் அப்புறப்படுத்தச் சூளுரைப்போம்.
உழைப்பவன் வியர்வை உலர்வதற்கு முன்பே அவனுக்குரிய கூலியை அளிக்க வேண்டும் என்றார்கள் நபிகளார். உழைப்பாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட உறுதி எடுத்துக்கொள்வோம்.