மக்கள் கண்காணிப்பகத்தில் சிபிஐ சோதனை எதற்காக? மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
சென்னை: மக்கள் கண்காணிப்பகம் நிறுவனத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களை மிரட்டும் நோக்கத்திற்காகவே இது போன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மக்கள் கண்காணிப்பகம்
தமிழகத்தின் பெரும் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை நடைபெறும் மனித உரிமை மீறல்களை (சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் படுகொலை உட்பட ) உலகிற்கு அறிய வைத்து சட்டத்தின் உதவியுடன் நீதிப் பெற்றுத் தரும் அரிய தொண்டை ஆற்றி வரும் நிறுவனம் ஹென்றி டிபேன் தலைமையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகம்.

கால் நூற்றாண்டு
கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் கல்வி உரிமை, குழந்தைகள் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள், மாற்று திறனாளிகள் உரிமைகள் என மனித உரிமைகளின் பல்வேறு தளங்களில் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்படும் செயற்பாட்டாளர்களை உருவாக்கியதில் மக்கள் கண்காணிப்பகத்தின் பங்களிப்பு மகத்தானது.

கண்டனம்
மக்கள் கண்காணிப்பகம் நிறுவனத்தில் நேற்றைய தினம் மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) நடத்திய சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்த நோக்கத்திற்காக நேற்றைய தினம் சிபிஐ சோதனைகள் நடத்தியதோ அது குறித்து ஏற்கெனவே சோதனைகள் நடத்தப்பட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது தேவையற்ற நடவடிக்கை ஆகும்.

மனித உரிமை
மனித உரிமை செயற்பாட்டாளர்களை மிரட்டும் நோக்கத்திற்காகவே இச்சோதனைகள் நடைபெற்றுள்ளன என்று தான் புரிந்து கொள்ள முடிகின்றது. இது போன்ற மிரட்டல் நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளின் அடிப்படையில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை முடக்கிவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications