அன்று ஏமாற்றம்; இன்று மகிழ்ச்சி; அரசியல் பேலன்ஸ் செய்த ஜவாஹிருல்லா!
சென்னை: பிளாஸ்டிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாக கூறியிருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா.
ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை தொடர்பாக கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இவர் விடுத்த அறிக்கை தமிழக அரசு மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததோடு ஏமாற்றம் தரும் வகையில் அரசின் முடிவுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
கூட்டணிக் கட்சியான திமுகவின் ஆட்சியில் எடுக்கப்பட்ட ஒரு முடிவுக்கு இவர் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
திமுக கூட்டணியிலிருந்து மெல்ல வெளியேறுகிறாரா ஜவாஹிருல்லா என விவாதங்கள் எல்லாம் நடத்தப்பட்ட சூழலில் இன்று அரசை பாராட்டி ஒரு அறிக்கை விடுத்திருக்கிறார். அதன் விவரம் பின்வருமாறு;

மகிழ்ச்சி
தமிழக அரசு சுற்றுச்சூழல் அக்கறையுடன் நெகிழியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்கான அரசாணை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறேன். நெகிழிக் கட்டுப்பாட்டில் நெகிழிக் குப்பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குக் கடிவாளம் போடுவதும் அதேநேரத்தில் மக்களுக்கு நெகிழி மற்றும் அதன் மாற்றுகள் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதும் மிக அவசியம். இவை இரண்டும் தமிழக அரசின் அரசாணையில் கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாராட்டு
நிறுவனங்களை தம் குப்பைகளுக்கு பொறுப்பாக்கும் "நீடித்த உற்பத்தியாளர் பொறுப்பு" குறித்தும் மீண்டும் மஞ்சப்பை என்கிற இயக்கத்தைப் பற்றியும் அரசாணை பிறப்பித்தது பொருத்தமான நடவடிக்கையாகும். மரபான இயற்கை சார்ந்த தீர்வை நோக்கி நகர்வதாக அரசாணை மேலும் குறிப்பிட்டு இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

மறுசுழற்சி
சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தும் நெகிழிப் பொட்டலங்கள் போன்றவை தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில் பெருநிறுவனங்களின் நொறுக்குத்தீனிப் பொட்டலங்கள் போன்றவை இந்த அரசாணையில் தவிர்க்கப் பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. நெகிழி ஒழிப்பில் மறுசுழற்சி செய்யத்தக்க நெகிழியை மறுசுழற்சி செய்வதும் மற்றவற்றைத் தடைசெய்வதுமே 'நெகிழிக் கழிவில்லா தமிழகத்தை' உருவாக்கும்.

பிளாஸ்டிக்
நெகிழியை எரித்து அழிக்கும் சாம்பலாக்கிகள் மற்றும் பைராலிசிஸ் நிலையங்களை அமைப்பது மேலும் சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்யும் எனவே இத்திட்டங்களையும் முதற்கட்டத்திலேயே மக்களின் உடல்நலன் மற்றும் சூழல் நலன் அடிப்படையில் உடனே தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications