அதிமுகவில் இணைந்த முன்னாள் மநீம நிர்வாகி.. சேர்ந்த வேகத்திலேயே ஸ்டாலினுக்கு எதிராக ஆவேச ட்வீட்!
கோவை: அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மநீம மாநில நிர்வாகி ரம்யா வேணுகோபால் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் சேர்ந்த கையோடு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சரியான முறையில் நிறைவேற்றத் தெரியாமல் திக்கித்திணறும் முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும் என்று ட்வீட் தட்டியுள்ளார் ரம்யா வேணுகோபால்.
நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி முதன்முதலாக 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. அந்த தேர்தலில் மநீம 2.6% வாக்குகளைப் பெற்றது. அடுத்து நடந்த சட்டசபை தேர்தலிலும் அதே அளவு வாக்கு சதவீதத்தைப் பெற்றது மநீம. கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் வெறும் 1,728 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வியைத் தழுவினார். தோல்விக்குப் பிறகு மநீமவின் முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்றுக்கட்சிகளில் சேர்ந்தனர்.

கடந்த ஜூலை மாத இறுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில சிறப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் மக்கள் நீதி மய்யம் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களைக் கூறி கட்சியில் இருந்து வெளியேறினார். ரம்யா வேணுகோபால், கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மநீம சார்பாக கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர். நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டிவிட்டு அவர் கட்சியில் இருந்து விலகியது மநீமவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரம்யா வேணுகோபால், அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரம்யா வேணுகோபால், "தீமை தலைதூக்கும் போதெல்லாம், தமிழ்ச் சமூகம் அமைதியான புரட்சியுடன் ஒன்றிணைந்து, மாநிலத்திற்கு ஸ்திரத்தன்மையையும் செழிப்பையும் மீட்டெடுக்கும் இரட்டை இலையைத் தேர்ந்தெடுக்கிறது என்பதே இந்த மாநிலத்தின் வரலாறாக இருக்கிறது.
மிகப்பெரிய அரசியல் தளத்தில் இணைந்ததில் நானும் எனது அணியும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். அதிமுக முன்னாள் அமைச்சர் அண்ணன் எஸ்.பி.வேலுமணி அவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தமிழகத்தில் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் திறமையான மற்றும் உறுதியான தலைமையின் கீழ் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்து நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை மீட்டெடுப்போம்.
ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர் தொடங்கி, ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமையின் கீழ் மலர்ந்த அதிமுக, அண்ணன் எடப்பாடியார் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான தலைமையின் கீழ் இப்போது பீனிக்ஸ் பறவை போல் உயர்ந்துள்ளது. மக்களின் குரலாக சாதாரண மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சி அ.தி.மு.க. இரட்டை இலையின் கீழ் நம் "வாழ்க்கை" மலர நாம் அனைவரும் கைகோர்ப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு புரட்சித் தமிழர் அண்ணன் திரு. இபிஎஸ் அவர்கள் 2021ம் ஆண்டில்
— Ramya Venugopal (@RamyaVenugopalM) September 15, 2023
தனது தொலைநோக்குப் பார்வையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக "குலவிளக்குத் திட்டம்" என்னும் சிறந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதா மாதம் ரூ. 1,500/-அவரவர் வங்கிக் கணக்கில்… pic.twitter.com/ZPC0xuN6tj
அதிமுகவில் சேர்ந்த கையோடு, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும் என்று ட்வீட் தட்டியுள்ளார் ரம்யா வேணுகோபால். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (X) பதிவில், எடப்பாடி பழனிசாமி 2021ம் ஆண்டில் தனது தொலைநோக்குப் பார்வையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் "குலவிளக்குத் திட்டம்" என்னும் சிறந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதா மாதம் ரூ. 1,500/-அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார்
இப்போது தீய சக்தி திமுக அரசு, மேற்கூறிய அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியை அதாவது தமிழகத்தின் அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் உதவித்தொகையாக ரூ. 1500/- என்பதை வெறும் ரூபாய் 1000/- என்று குறைத்தது மட்டுமல்லாமல், அனைத்து மகளிருக்கும் என்பதையும் சில குறிப்பிட்ட வரையறைகளுக்குட்படுத்தி, ஏகப்பட்ட குழப்பங்களுடன் இரண்டு வருட காலதாமதமதத்திற்குப்பின் இப்பொழுது தான் செயல்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.
எடப்பாடி பழனிசாமி அவர்களது தொலைநோக்குத் திட்ட வாக்குறுதியைத் தங்கள் வாக்குறுதியாக மாற்றிக்கொண்ட திமுக அரசு திறனற்ற நிர்வாகத்தினால் உதவித் தொகை அளிக்கும் திட்டத்தில் தேவையற்ற குழப்பங்களளையும் தாமதங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அனைத்து மகளிருக்கும் உதவித்தொகையாக மாதம் ரூபாய் 1000/- அளிப்பதாகக் கூறிய தங்களது வாக்குறுதியை சரியான முறையில் நிறைவேற்றத் தெரியாமல் திக்கித்திணறும் திமுக அரசு மற்றும் அதன் தலைவர், உடனடியாகத் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications