மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாசலம் பாஜகவில் இணைந்தார் - காரணம் இதுதான்
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனப் பொதுச் செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். புதிய வேளாண் சட்டத்தை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகியதாக கூறியுள்ளார் அருணாசலம். கட்சியின் மிக முக்கிய உறுப்பினரே வேறு கட்சியில் இணைவதால் கமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். அதிமுக, திமுக, மக்கள் நீதிமய்யம் போன்ற கட்சியின் மிக முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கமல்ஹாசன் தென்மாவட்டங்களில் முதற்கட்ட பிரசாரத்தை முடித்துள்ளார். இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை வட மாவட்டங்களில் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அக்கட்சியின் மிக முக்கிய உறுப்பினர் இன்று பாஜகவில் இணையப்போகிறார்.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் நேற்று எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது, பாஜகவில் மாற்றுக்கட்சியை சேர்ந்த மிக முக்கிய தலைவர் இணைகிறார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனப் பொதுச் செயலாளரான அருணாச்சலம் இன்று கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
கமல்ஹாசன் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே கமலுடன் இணைந்து செயல்பட்டவர் அருணாசலம். சில வாரங்களாகவே கட்சியில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார் அருணாசலம்.
பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணாசலம், தான் ஏன் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜக இணைந்ததற்கான காரணத்தை தெரிவித்தார். புதிய வேளாண் சட்டத்தை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகியதாக கூறியுள்ளார் அருணாசலம்.