ஒருத்தரும் வரல.. அழைப்பு விடுத்தும் காற்று வாங்கிய மநீம அலுவலகம்.. கமல் கட்சி கூடாரம் காலியாகிறதா?
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் இன்று கட்சியின் பரப்புரையாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மநீம தலைமை அலுவலகத்தில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேரம் ஆனதே தவிர, நிர்வாகிகள் பெரிய அளவில் யாருமே வரவில்லை. ஓரிருவர் மட்டுமே கட்சி அலுவலகத்தில் இருந்தனர்.
லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் வேட்பாளர்கள் அறிவிப்பு முடிந்துவிட்டது. வேட்பு மனு தாக்கலும் தொடங்கியுள்ளதால், பிரசாரத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கட்சியின் பரப்புரையாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால், காலையிலே கட்சி நிர்வாகிகள் கூட்டம் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்டது. செய்தியாளர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடர்பான செய்திகளை சேகரிக்க அங்கு வந்து இருந்தனர். ஆனால், நேரம் ஆனதே தவிர.. நிர்வாகிகள் பெரிய அளவில் யாருமே வரவில்லை.
ஓரிருவர் மட்டுமே கட்சி அலுவலகத்தில் இருந்தனர். இதனால், வேறு வழியின்றி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தேர்தலில் ஒரு தொகுதியில் கூட போட்டியிடாததால், அதிருப்தி அடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள யாரும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில் பேச்சாளர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தாலும் யாருமே வராததால் தேர்தல் நேரத்தில் பரபரப்பு இன்றி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் காட்சி அளித்தது. இன்றைய கூட்டத்திற்கு கமல்ஹாசன் வர மாட்டார் என்பதால் இதில் பங்கேற்க கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே, திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. அப்போது முதல் ஆளாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை தொகுதி ஒதுக்கப்படலாம் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு மாநிலங்களவை இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வந்த கமல்ஹாசன் , திமுக கூட்டணியில் இணைந்ததற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியது. சமூக வலைத்தளங்களிலும் இந்த அதிருப்தி அப்பட்டமாக வெளிப்பட்டது.
எனினும், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது ஏன் என்பது குறித்து கமல்ஹாசன் வீடியோ வாயிலாக விளக்கம் ஒன்றை கூட்டணியில் சேர்ந்த மறுநாளே வெளியிட்டு இருந்தார். அதில் "எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு இது" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications