கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்.. இன்னமும் 'களம்' காணாத ரஜினிகாந்த்
சென்னை: நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாம் கட்டம் நேற்று (மார்ச் 1) முதல் தொடங்கியது. குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது. மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி, தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு ரூ.250 வரை கட்டணம் வசூலிக்க முடியும். தடுப்பூசி மையத்தின் பயனாளிகள் கட்டணமாக ரூ. 150, தடுப்பூசி சேமிப்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நபருக்கு ரூ.100 வரை வசூலிக்க முடியும். அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசியானது இலவசமாக கிடைக்கும்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள Co-WIN Appஐ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக அவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் பயனாளிகள் தாங்களாகவே 'கோ-வின் 2.0' இணையதளத்திலும், 'ஆரோக்கிய சேது' செயலியிலும் முன்பதிவு செய்யலாம். இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசி நிகழ்வில், சுமார் 25 லட்சம் பதிவு செய்திருக்கின்றனர். திங்கட் கிழமை வெளியான புள்ளிவிவரங்களின்படி, முதல் நாளில் சுமார் 1.46 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று, பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

ஊழல் தடுப்பூசி
இந்தநிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், 'ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினி எங்கே?
இதைத் தொடர்ந்து, மநீம தொண்டர்கள், நிர்வாகிகள் 'எங்க தலைவர் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக எப்படி தடுப்பூசி போட்டுக் கொண்டார் பார்த்தீர்களா' எனும் ரீதியில் சமூக தளங்களில் டிவீட்களை பதிவிட, பலரும் ரஜினி தடுப்பூசி போடவில்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வந்துட்டா கஷ்டம் சார்
'அண்ணாத்த' ஷூட்டிங் முடித்து, பக்காவாக அரசியல் கட்சியை லான்ச் செய்து, ஆட்சியைப் பிடிப்பது என்று பக்கா பிளான் போட்டு வைத்திருந்த ரஜினிக்கு, அவரது வாழ்க்கையில் மாபெரும் வில்லனாக அமைந்தது கொரோனா. ஏற்கனவே அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், கொரோனா தொற்று ஏற்பட்டால் 'கஷ்டம்' என்று மருத்துவர்கள் எச்சரிக்கை, கடும் விமர்சனங்களுக்கும், கேலி, கிண்டலுக்கும் மத்தியில், 'அரசியலுக்கு வரப் போவதில்லை' என்று அறிவித்தார் ரஜினி.

இதிலும் லேட்டா?
தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் ரஜினி, விரைவில் 'அண்ணாத்த' ஷூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், மூத்த குடிமகனான கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அந்த கொரோனாவால் தன் அரசியல் வாழ்க்கையையே ஒதுக்கி வைத்த மற்றொரு மூத்த குடிமகனான ரஜினி, இந்நேரம் தடுப்பூசியை போட்டிருக்க வேண்டாமா என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications