கிளாம்பாக்கத்தில் அத்தனை வசதி இருந்தும் ATM இல்லையே.. அல்லாடும் மக்கள்.. வந்தது நடமாடும் ஏடிஎம்!
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், ஏடிஎம் மையம் இல்லாததால், பயணிகள் பலர் தவித்த நிலையில், நடமாடும் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி தொடங்கி வைத்தார். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

ஏராளமான நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கியது முதலே பொதுமக்கள் பல்வேறு குறைகளையும் முன் வைத்து வருகின்றனர். கிளாம்பாக்கத்தில் ஏடிஎம் வசதி இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவ்வளவு பெரிய பேருந்து முனையத்தில் ஏடிஎம் மையம் இல்லை என பயணிகள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பயண கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு, பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என அங்கு வந்த பயணிகள், அதிர்ச்சியடைந்தனர். நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில், ஒரு இடத்தில் கூட ஏடிஎம் சேவை மையம் அமைக்கப்படவில்லை. ஏராளமான பயணிகள், ஏடிஎம் மையங்களை தேடி அலைந்து திரிந்தனர்.
பலர், வேறு வழியின்றி, பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து, ஊரப்பாக்கம் சென்று ஏடிஎம்களில் பணம் எடுத்து வந்தனர். பயணிகள் எல்லா நேரத்திலும் கையில் பணம் வைத்திருப்பது சாத்தியமில்லை. கூட்ட நெரிசல் மிக்க பகுதியில் பாதுகாப்பானதும் இல்லை. எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்திற்குள், ஏடிஎம் மற்றும் வங்கி சேவையை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் முக்கியமான கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், ஏடிஎம் சேவைக்காக அல்லாடும் பொதுமக்களுக்காக ஸ்டேட் பேங்க் சார்பில் நடமாடும் ஏடிஎம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் பின்பகுதியில் இடவசதி செய்யப்பட்டு ஓர் ஏடிஎம் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்தில் ஏறிச் சென்று பணம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடமாடும் ஏடிஎம் மையம், கிளாம்பாக்கம் பேருந்து முனைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு சென்று வரிசையில் நின்று ஏராளமானோர் பணம் எடுத்து வருகின்றனர். நிரந்தர ஏடிஎம் மையங்களை பேருந்து முனையத்தின் பல இடங்களில் பயணிகளின் வசதிக்கேற்ப நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications