ஸ்தம்பித்த மெரினா.. விமானப்படை நிகழ்ச்சியில் 4 லட்சம் மக்கள்.. முடங்கிய செல்போன் நெட்வொர்க்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெரினாவில் குவிந்திருப்பதால், அங்கு செல்போன் நெட்வொர்க்கும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லத்துக்கு நேர் எதிரில் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதி அனில் சவுரா, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இது மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டு சாகச நிகழ்ச்சியை பார்வையிடுகின்றனர்
காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை மொத்தம் 2 மணி நேரம் தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண்பதற்கு சென்னை முழுவதும் இருந்து லட்ச கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்து வருகின்றனர். மக்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக, காவல்துறையினர் காமராஜர் சாலையில் 22 இடங்களில் பார்க்கிங் வசதிகளை செய்துள்ளனர்.
மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் அந்த வழித்தடத்தில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 8,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. மெரினாவில் சுமார் 15க்கும் மேற்பட்ட சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் குடைகளுடன் மெரினா சென்று, விமானப்படை சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எதிர்பார்த்ததை விட, மக்கள் அதிகளவு குவிந்துள்ளனர். இதனால் சென்னை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
மெட்ரோ ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முக்கியமாக ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதேபோல மின்சார ரயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவு உள்ளது. வேளச்சேரி, சேப்பாக்கம் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
இதனால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. இதனால் பலர் குறித்த நேரத்தில் மெரினா கடற்கரை செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் செல்போன் நெட்வொர்க்கும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் உள்ள மக்கள் செல்போனில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அங்கு வந்திருந்த மக்கள் மட்டுமல்லாமல், சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில் வசிக்கும் மக்களின் செல்போன் நெட்வொர்க்கும் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் குறையும்போதுதான், செல்போன் நெட்வொர்க் பிரச்னை சரியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மக்களின் பாதுகாப்பக்காக, அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக காவல்துறையினர் அனுப்பப்பட்டுள்ளனர். மக்கள் மிகுந்த கவனத்துடன் வந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications