மொபைல் நெட்வொர்க், இணைய சேவைகள் முடங்க வாய்ப்பு..? LPG தட்டுப்பாட்டால் வந்தது எச்சரிக்கை!
சென்னை: எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு நீடித்தால் மொபைல் நெட்வொர்க், இணைய சேவைகள் பாதிக்கப்படலாம் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பல பகுதிகளில் செல்போன் கோபுரங்கள், டேட்டா சென்டர்களுக்கு எல்பிஜி மூலம் இயங்கும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுவதால், தட்டுப்பாடு நீடித்தால் செயலிழக்க வாய்ப்புள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. அதாவது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கடல் வழி வாணிபத்தை நிறுத்தியுள்ளது. இதனால், ஈரானை நம்பி இருந்த பல்வேறு உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன.

இந்தியா தனது LPG தேவையின் பெரும்பகுதியை சர்வதேச சந்தைகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதனால், எந்தவொரு உலகளாவிய இடையூறும் உள்நாட்டு விநியோக நிலையை விரைவாகப் பாதிக்கக்கூடும். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதலில் வீட்டு உபயோக நுகர்வோருக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை வீட்டு சமையல் எரிவாயு விநியோகத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், தங்கள் செயல்பாடுகளுக்கு LPG-யை நம்பியிருக்கும் பல தொழில்களுக்கு இது புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. ஹோட்டல்கள் உள்ளிட்டவை கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தங்களுக்கு வந்து கொண்டிருந்த LPG சப்ளை திடீரென நிறுத்தப்பட்டுவிட்டதாக டெலிகாம் உள்கட்டமைப்பு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன. மார்ச் 5 பல டெலிகாம் டவர் தயாரிப்பு ஆலைகளுக்கு LPG விநியோகம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலைகள், டவர் உற்பத்தியின் பல்வேறு நிலைகளுக்கு எரிவாயு அடிப்படையிலான எரிபொருளையே நம்பியுள்ளன.
இந்த திடீர் எல்பிஜி கேஸ் விநியோக நிறுத்தம் தொலைத்தொடர்புத் துறையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சனை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், டெலிகாம் டவர் தயாரிப்பு வேகம் குறையக்கூடும். டெலிகாம் டவர்கள் பல உலோக செயலாக்க நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. இந்த தயாரிப்பு முறையில் 'கால்வனைசேஷன்' ஒரு முக்கியமான ஸ்டெஒ. கால்வனைசேஷன், உலோகக் கட்டமைப்புகளை துரு மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இந்தச் செயல்பாட்டின் போது, உலோகத்தை சூடாக்கவும், டவர் பாகங்களுக்குப் பாதுகாப்பு பூச்சு பூசவும் LPG அல்லது பிற எரிவாயு அடிப்படையிலான எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.
LPG சப்ளை தடைபட்டால், ஆலைகள் இயல்பான அளவில் உற்பத்தியைத் தொடர சிரமப்படலாம். சில சமயங்களில், நிறுவனங்கள் தற்காலிகமாக செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். இது நாடு முழுவதும் புதிய டெலிகாம் டவர்கள் கிடைப்பதை பாதிக்கக்கூடும்.
மேலும், பல பகுதிகளில் செல்போன் கோபுரங்கள், டேட்டா சென்டர்களுக்கு எல்பிஜி மூலம் இயங்கும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுவதால், எல்பிஜி தட்டுப்பாடு நீடித்தால் ஜெனரேட்டர்கள் இயங்க வழியில்லாமல் அவை செயலிழக்க வாய்ப்புள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
எல்பிஜி பற்றாக்குறை நாடு முழுவதும் பல்வேறு துறைகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், நம் அன்றாடப் பயன்பாட்டிற்கு தேவையான செல்போன், இணைய தொடர்பிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications