சென்னையில் நள்ளிரவு வரை மழை கொட்டும்.. அடுத்த 2 மணிநேரம் முக்கியம்.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சென்னை: சென்னையில் இன்று பகலில் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் இரவில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இன்று நள்ளிரவு 1 மணி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பிற 7 மாவட்டங்களிலும் நள்ளிரவு 1 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலையில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கியது. மதிய வேளையில் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. ஆனால் மாலை நேரத்தில் சென்னையில் காலநிலை மாற தொடங்கியது. இரவில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது.

இந்நிலையில் தான் சென்னையில் நள்ளிரவு ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நள்ளிரவு ஒரு மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று இரவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், மேடவாக்கம், வண்டலூர், ஓஎம்ஆர் சாலை, சோழிங்நல்லூரர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அதேபோல் அரும்பாக்கம், சூளைமேடு, வடபழனி, அமைந்தகரை, அண்ணா நகர், கோயம்பேடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரபாக்கம், மாங்காடு உள்ளிட்ட இடங்களில் இன்று இரவில் மழை பெய்தது.












Click it and Unblock the Notifications