இந்தியா டுடேவ விடுங்க.. என்டிடிவியில் பிடிஆரின் அடுத்த சம்பவம்! “பாய்ண்டை” பிடித்து மோடியிடம் கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததே பிரதமர் மோடிதான் என்று ஆங்கில தொலைக்காட்சி விவாதத்தில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் ஆபத்தானது என்றும், அதனை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
"இலவச கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இந்த கலாச்சாரத்தை கடைபிடிப்பவர்கள், புதிய விரைவு சாலைகளை, புதிய விமான நிலையங்களை, பாதுகாப்பு பகுதிகளை கட்டமைக்க மாட்டார்கள். இந்த எண்ணங்களை நாம் தோற்கடிக்க வேண்டும்." என்றார்.
தக் லைப் தலைவா.. பிரித்து மேய்ந்த பிடிஆர்! டிவி நேரலை என்று பாராமல் சம்பவம் - அணிவகுக்கும் மீம்ஸ்கள்
வழக்கு
இந்த நிலையில், இலவசங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் இதனை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார். இதற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பலரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் திமுகவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.
தலைமை நீதிபதி
இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவது அரசின் கடமை. இந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது தொடர்பான கேள்வியும் உள்ளது." என்றார்.
இந்தியா டுடே விவாதம்
இந்த நிலையில் நேற்று இந்தியா டுடே ஆங்கில தொலைக்காட்சியில், இலவச திட்டங்கள் தொடர்பாக விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது இலவசங்கள் திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை முன்வைத்து நெறியாளர் அவரிடம் கேள்வி எழுப்பினார்.
பிடிஆர் பேச்சு
இதற்கு பதிலளித்த பழனிவேல் தியாகராஜன், "எதன் அடிப்படையில் நீங்கள் சொல்வதை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள்? அரசியலமைப்பின் அடிப்படையிலா? அல்லது இதில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளீர்களா? அல்லது நீங்கள் பொருளாதாரத்தில் பி.எச்.டி முடித்துள்ளீர்களா? அல்லது நோபல் பரிசைதான் வைத்திருக்கிறீர்களா? எங்களை விட சிறந்தவர்கள் என்று சொல்ல உங்களிடம் ஏதாவது இருக்கா? பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்று கடனை குறைத்து, வருமானத்தை உயர்த்தி, வேலைவாய்ப்பை பெருக்கி சிறப்பான சாதனைகள் ஏதேனும் செய்துள்ளீர்களா? இதில் எதுவும் உண்மை இல்லாதபோது நாங்கள் ஏன் நீங்கள் சொல்வதை கேட்கவேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.
NDTV விவாதம்
இதேபோல் NDTV ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிடிஆரிடம் நெறியாளர் இலவச தொலைக்காட்சி பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், "பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஆளும் உபியில் இலவச பேருந்து பயண திட்டத்தை அறிவித்தார். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததே பிரதமர் மோடிதான். அதுமட்டும் ஏற்கக்கூடியதா? இலவச பைக் பரவாயில்லை, இலவச உணவு, டிவி கூடாதா? என்று கேள்வி எழுப்பினார். இது அறிவாளிகளின் பேச்சா? அர்த்தமற்ற விவாதம் இது." என்றார்.