பேய் மழை கொட்டப்போகுது.. சென்னை, நீலகிரி உட்பட 11 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை
சென்னை: தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளதாலும், அரபிக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை சென்னை, நீலகிரி, கோவை என 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
11 மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை
செங்கல்பட்டு
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
கோயம்புத்தூர்
நீலகிரி
கன்னியாகுமரி
திருநெல்வேலி
தேனி
தென்காசி
திருப்பூர்
என 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டிவிட்டர் பதிவில், "கேரளாவுக்கு மேல் மழை மேகங்கள் அதிக அளவு சூழ்ந்திருக்கிறது. மூணார் இரண்டாவது நாளாக அதி கனமழையை பெற்று வருகிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் மலையை ஒட்டிய பகுதிகளில் அதிக மழை பதிவாகலாம். சென்னையில் பருவமழையின் தாக்கமாக சாரல் மழை பெய்து வருகிறது. நாளையும் இதே போல்தான் இருக்கும்" என்று கூறியிருந்தார்.
அதேபோல இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், "தென்மேற்கு பருவமழை, கேரளாவில் இன்று (24-05-2025) துவங்கிஉள்ளது. தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை இன்று அநேக பகுதிகளில் பரவியுள்ளது.
நேற்று (23-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி,இன்று காலை (24-05-2025) 0530 மணி அளவில், மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 08.30 மணி அளவில், அதே பகுதிகளில், ரத்னகிரிக்கு வடக்கு-வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிலவுகிறது. இது மெதுவாக கிழக்கு திசையில் நகர்ந்து, தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில், இன்று நண்பகல் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். எனவே நாளை மற்றும் நாளை மறுநாள்(மே.25,26) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மே.27ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே.28 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே.29 மற்றும் 30ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications