மொந்தா புயல் சென்னையை தாக்காது.. ஆனால் சூறாவளியால் சிட்டிக்கு வந்த சூப்பர் நன்மை.. வா ராசா!
சென்னை: மொந்தா புயல் சென்னையை நேரடியாக தாக்க போவது இல்லை. இது ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடா நோக்கி செல்கிறது. இந்த நிலையில் மொந்தா புயல் காரணமாக சென்னைக்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது.
வங்கக்கடலில் மொந்தா புயல் உருவானதையடுத்து, தமிழ்நாடு கடலோரப் பகுதியின் நான்கு மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகியவற்றுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை முதல் மிகக் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு சாதகம்
இந்த புயல் சென்னையை தாக்காது. சென்னைக்கு பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால் சென்னைக்கு தேவையான மழையை கொடுக்கும். சென்னையின் நீர் நிலை அளவுகளை உயர்த்தும் அளவிற்கு மழை பெய்யும். இது சென்னைக்கு சாதகமாக மாறும். முக்கியமாக செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் நிரம்ப வழி வகுக்கும். அடுத்த வருடம் கோடையில் நீர் இருப்பை வைத்துக்கொள்ள சாதகமாக இந்த மழை இருக்கும்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகரும் என அண்மைய வானிலை அறிக்கையில் IMD தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதிகள், குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானிலை மோசமடையக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக IMD அறிவித்துள்ளது. நகரின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் தீவிர மழைப்பொழிவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமைக்கான வானிலை அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இது தொடர்ச்சியான பரவலான மழைப்பொழிவின் சாத்தியத்தைக் குறிக்கிறது.
எங்கே மழை பெய்யும்?
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றமாக இருப்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், விட்டு விட்டு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழையை எதிர்கொள்ள நகர நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் மோட்டார் பம்புகளைத் தயார் நிலையில் வைத்துள்ளது. பொதுப்பணித்துறை (PWD) முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்நிலைகளில் நீர் வெளியேற்ற அளவுகளைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொந்தா புயல் கரையை கடக்கும்
வடகிழக்குப் பருவமழை வலுப்பெற்று வருவதால், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், மழைநீர் தேங்கும் சம்பவங்களை உதவி எண்கள் மூலம் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான 'மொந்தா' புயல், காகிநாடா அருகே அக்டோபர் 28 அன்று பலத்த சூறாவளியாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் பெரிய அளவில் மழை பெய்ய கூட மேகங்களை இழுத்து வரலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக புயல் கரையை கடக்கும் முன் அதன் கண்ணின் முன் பக்கமும், பின்பக்கமும் மழை மேகங்கள் இருக்கும். வங்கக்கடலில் உருவான மொந்தா புயல் அதேபோல்தான் மேகங்களை இழுத்து வரும். இந்த புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் மேகங்கள் சென்னை அருகே வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதிக அளவு மேகங்களை இந்த வங்கக்கடலில் உருவான 'மொந்தா' புயல் இழுத்து வர வாய்ப்புகள் உள்ளன. இதனால் சென்னையில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications