ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு அடுத்து யார் கைது? "45" க்கு அஞ்சி நடிகைகள் தலைமறைவு! போனும் ஸ்விட்ச் ஆப்
சென்னை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்தில் இன்னும் சில நடிகர், நடிகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த மாதம் 22 ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் இருவர் பீர் பாட்டிலால் அடித்துக் கொண்ட சம்பவத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவருடைய செல்போனை ஆய்வு செய்த போலீஸாருக்கு அதிர்ச்சி! அதில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதை பொருள் சப்ளை செய்ததற்கான வாட்ஸ் ஆப் சாட்கள் இருந்தன. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது பிரதாப் என்பவரிடம் இருந்து கொக்கைன் எனும் போதை பொருளை ஸ்ரீகாந்துக்கு வாங்கிக் கொடுத்ததாக தெரிவித்தார்.
தயாரிப்பாளர்
மேலும் பிரசாத் ஒரு தயாரிப்பாளர், ஸ்ரீகாந்த் நடித்த "தீங்கிரை" என்ற படத்தை தயாரித்தாராம். அந்த வகையில் பிரசாத்துக்கு ஸ்ரீகாந்தை தெரிந்திருந்தது. இதையடுத்து ஸ்ரீகாந்திடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போதை பொருளை தான் பயன்படுத்தவில்லை என தெரிவித்தாராம்.
ரத்த மாதிரிகள்
இதையடுத்து அவரது ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில் அவர் கொக்கைனை உட்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்து அவரை புழல் சிறையில் வரும் ஜூலை 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளார்கள்.
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை
நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த், எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் போதை பொருளை பயன்படுத்தியது தவறுதான். தயாரிப்பாளர் பிரசாத்திடம் எனக்கு தர வேண்டிய பாக்கியை கேட்ட போதெல்லாம் எனக்கு 3 முறை கொக்கைன் கொடுத்தார்.
போதைக்கு அடிமை
பிறகு அந்த போதைக்கு அடிமையாகிய நான் 4ஆவது முறை தானே கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டேன். எனக்கு ஜாமீன் கொடுங்கள் என கேட்டு கண்ணீர் விட்டார். இந்த நிலையில் போதை பொருள் தடுப்பு வழக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கழுகு நடிகர் கிருஷ்ணா
இந்த நிலையில் கழுகு பட நடிகர் கிருஷ்ணாவும் போதை பொருளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர் ஆதாயம் இல்லாமல் நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் சிலருக்கு போதைப் பொருளை கைமாற்றியதாகவும் தகவல்கள் வெளியானது.
சம்மன்
இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தலைமறைவானார். பிறகு அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் முன்பு விசாரணைக்கு ஆஜராகினார்.
விசாரணை
அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கு இரைப்பை அழற்சி உள்ளது. அதனால் இதயத் துடிப்பு வேகமாக துடிக்கும். எப்போதும் படபடப்பாக இருக்கும். இதனால் என்னால் போதை பொருளை பயன்படுத்தவே முடியாது. நான் பயன்படுத்தியதும் இல்லை.
நீதிமன்றத்தில் ஆஜர்
ஸ்ரீகாந்துடன் நான் நட்புடன் பயணித்தேன். எனக்கு போதை பொருள் விற்பனை செய்யும் யாருடனும் தொடர்பு இல்லை. இதுவரை எந்த போதை பொருளையும் நான் பயன்படுத்தியதே இல்லை என்றார். இந்த நிலையில் இன்று மீண்டும் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர். ஒரு கட்டத்தில் அவரை போலீஸார் கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் உள்ளனர்.
பாலிவுட்
முன்பெல்லாம் பாலிவுட்டில்தான் இந்த போதை கலாச்சாரம் இருந்து வந்ததாக சொல்லப்பட்டு வந்தது. தென்னிந்தியாவை பொருத்தமட்டில் உயர் ரக மது பார்ட்டிதான் அவ்வப்போது நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது இங்கும் போதை பொருள் பார்ட்டி வைக்கும் கலாச்சாரம் வந்துவிட்டது.
45 நாட்கள்
முன்னணி நடிகர், நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்களை பற்றிய விவரங்களை உளவு பிரிவு போலீஸார் சேகரித்து வருகிறார்கள். இந்த போதைப் பொருளை பயன்படுத்தினால் சுமார் 45 நாட்கள் வரை உடலில் இருக்கும். எனவே 45 நாட்களுக்குள் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
செல்போன் ஸ்விட்ச் ஆப்
இதனால் 45 நாட்களை தாண்ட வேண்டும் என்பதற்காகவே சில நடிகர், நடிகைகள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள். அவர்களுக்கு எதிரான ஆதாரங்களையும் திரட்டி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications