பேரறிவாளனுக்கு 19 வயசு... காலையில அனுப்புறோம்னு கூட்டிட்டு போனாங்க - அற்புதம்மாளின் உருக்கமான பேட்டி
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ள நிலையில், கைது முதல் பரோல் கிடைத்தது வரை அனுபவித்த வலிகள் குறித்து அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஆண்டு பேசிய வீடியோவை தற்போது காணலாம்.
Recommended Video
கடந்த 2021 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அவரது தாயார் அற்புதம்மாள் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் பேரறிவாளனுக்கு நடந்தது என்ன? குடும்பத்தின் வலிகள், வழக்கு விபரம், உதவியவர்கள் குறித்து விரிவாகவும் உருக்கமாகவும் பேசி இருப்பார்.
விடுதலை காற்றை சுவாசித்த பேரறிவாளன்... பறை மேளம் இசைத்து கொண்டாட்டம்
19 வயதில் கைது
அதில், "ஒரு சின்ன விசாரணை.. நாங்கள் விசாரித்து அனுப்பிவிடுகிறோம். காலையில் உங்களை மகனை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லி பேரறிவாளனை அவர்கள் கூட்டிச் சென்று 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. 30 ஆண்டுகால சிறை வாழ்க்கை... பிறந்த 19 ஆண்டு வரை வெளியில் இருந்தான் என் பிள்ளை. அதைவிட அதிகமாக 30 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டான். மரண சிறைவாசியாகவும் இருந்துவிட்டான்.
அப்போது யாருமே நம்பவில்லை
இது எல்லோருக்கும் தெரியும். இவர்களுக்கு தீர்ப்பு வந்தபோது நான் சொன்னேன், இந்த கொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை, அநியாயமாக சிக்க வைத்துள்ளார்கள் என்று. ஆனால் யாரும் நம்பவில்லை. மரண தண்டனை சிறைவாசியாக இருந்தபோது மகனிடம் வாக்குமூலம் வாங்கிய ஐபிஎஸ் அதிகாரி தியாகராஜன் வெளியில் வந்து தனது கருத்தை வெளியிட்டார்.
தியாகராஜன் ஐபிஎஸ் கருத்து
"பேரறிவாளன் சொன்ன வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்திருந்தேன் என்றால் இன்று அவருக்கு இந்த தண்டனை கிடைத்திருக்காது. சில வார்த்தைகளை விட்டதால் அவருக்கு இவ்வளவு பெரிய தண்டனை. அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை." என்று சொன்னது மட்டுமில்லாமல் உச்சநீதிமன்றத்திலேயே பிரமான பத்திரத்தை பதிவு செய்திருக்கிறார். சரி எல்லாம் தெரிந்துவிட்டது. என் பிள்ளைக்கு எந்த கொலை தொடர்பும் இல்லை, விடுதலையாகிவிடுவான் என்று நினைத்தேன். ஆனால் விடுதலையாகவில்லை.
சிறையில் கல்வி
இந்த நிலையில்தான் என் மகனின் 30 ஆண்டுகால வாழ்க்கை சிறையில் கழிந்துவிட்டது. சிறை வாழ்க்கையை என் மகன் பயனுள்ளதாக பயன்படுத்திக்கொண்டான். தான் படித்தது மட்டும் இல்லாமல் சிறைவாசிகள் பலருக்கு படிப்பறிவை கொடுத்தான். இருந்தாலும் என் மகன் சுதந்திரமாக வாழவில்லை என்பது எங்களுக்கு கவலையாக இருக்கிறது.
உடல்நல பாதிப்பு
30 ஆண்டுகால சிறைவாழ்க்கையால் என் மகன் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு தொடர் சிகிச்சை கிடைக்கப்பெறவில்லை. நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். இந்த சிறைவாழ்க்கை என் மகனின் இளமை, வாழ்க்கை, நிம்மதி எல்லாம் போனது என்று சொல்வதைவிட ஒட்டுமொத்தமாக குடும்பத்தின் நிம்மதியே போய்விட்டது. என் மகனுக்கு சிறிநீரக தொற்று வியாதி உள்ளது.
பரோல்
அவனால் கொரோனாவை தாங்க முடியாதே என்று வருந்தினேன். அவனுக்கு சிகிச்சைபெற வேண்டி நீண்ட சாதாரண பரோல் வேண்டி அரசுக்கு விண்ணப்பித்தேன். 30 நாள் பரோல் கிடைத்தது. தொடர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் இனி என் மகன் சிறைக்கு போகக்கூடாது. 30 ஆண்டுகள் என்பது எவ்வளவு நீண்ட சிறை தண்டனை என்பதை உணர்ந்த ஒரு தாயாக சொல்கிறேன். அரசு சிறைக்கு அனுப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ்
பேரறிவாளன் நிரபராதி என்று தியாகராஜன் சொன்ன உடனே மக்கள் ஆதரவு அதிகரித்தது. எல்லோரும் குரல் கொடுத்தார்கள். இந்த தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தாமஸ் என் மகனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என தீர்ப்பளித்தார். அனைத்தையும் விட அதிகமாக நீதியரசரும் சட்டத்துறை அமைச்சருமான கிருஷ்ணய்யர், பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்தார். தான் வாழ்ந்த 100வது ஆண்டு அவர் உயிரிழந்தார். தனது கடைசி நாள் வரை அறிவு விடுதலைக்காக போராடினார்.
இழந்தது கிடைக்காது
இவ்வளவு ஆதரவு இருந்தும் என் மகனுக்கு வெளியுலக வாழ்க்கை கிட்டவில்லை. இழந்ததை யாராலும் திரும்பித்தர முடியாது. இந்த வயசான காலத்திலாவது என் புள்ள எங்களோடு இருக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். நான் கேட்ட உடனே பரோல் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்." எனக் குறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு பேசி ஓராண்டு கடப்பதற்கு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.