அவ்வளவு அக்கறையோ?.. "அந்த பாலியல் வீடியோ" பற்றி ஆளுநர் கவலைப்படாதது ஏன்?.. ஜோதிமணி கேள்வி
அரசின் செயல்பாடுகளில் குறுக்கிட ஆளுநரை அனுமதிக்க முடியாது என்கிறார் ஜோதிமணி
சென்னை: தமிழக ஆளுநர் ரவி, அரசின் செயல்பாடுகளில் குறுக்கிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கறாராக கூறியுள்ளார். இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி, அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவர் குறித்த பேச்சுகளும், பரபரப்புகளும், அதிகமாக வர ஆரம்பித்தன.. ஒருவேளை திமுக அரசுக்கு நெருக்கடியை உண்டுபண்ணுவாரா? அல்லது இணக்கமான போக்கை கடைப்பிடிப்பாரா? என்பன போன்ற விவாதங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்தன.
மசாஜ் சென்டர்களில் விபசாரம்.. 9 பேர் கைதில் திடீர் திருப்பம்.. பரபரக்கும் புதுவை!
திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே மத்திய அரசு அவரை நியமித்து இருப்பதா திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களே பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்... ஆனாலும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கு ஆளுநர் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதற்கு எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
வரவேற்பு
ஆளுநர் சென்னை வந்ததுமே அவரை வரவேற்றார்.. பொறுப்பேற்றதுமே அவருக்கு வாழ்த்து சொன்னார்.. சமீபத்தில் சென்று அவரை நேரடியாக சந்தித்து விட்டும் வந்தார்.. ஆனால், எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக தலைவர்கள் திமுகவுக்கு நெருக்கடியை உண்டுபண்ணவும், திமுகவை டேமேஜ் செய்யவும், அடிக்கடி ஆளுநரை சந்தித்தது புகார் அறிக்கைகளை தந்துவிட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
உத்தரவு
இப்படிப்பட்ட சூழலில்தான், 2 நாளைக்கு முன்பு, சட்டம் ஒழுங்கு குறித்து அடிக்கடி விசாரித்த ஆளுநர் அனைத்து துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தலைமை செயலருக்கு உத்தரவிட்டதாக தகவல் பரவியது... இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.. காரணம், கடந்த சில நாட்களுக்கு முன்புதான், அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
சுற்றறிக்கை
அதில், திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பவர்பாயிண்ட்டில் தயார் செய்து வைக்க வேண்டும்... மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும்... ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
விளக்கம்
ஆனால், ஆளுநர், இறையன்புவிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளதாக கூறப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.. இதற்கு இறையன்புவே உடனடியாக ஒரு விளக்கமும் தந்திருந்தார்.. நிர்வாக ரீதியான கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானதல்ல என்றும், அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைதான் என்பது தெரியும், இது தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.
கண்டனங்கள்
இருப்பினும் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் இதுகுறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. ஆளுநரின் குறுக்கீட்டை ஏற்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கூறியிருந்தனர்.. இந்நிலையில் கரூர் எம்பி ஜோதிமணியும் தன்னுடைய கருத்தை ட்வீட்டாக பதிவிட்டுள்ளார்.
வீடியோக்கள்
அதில், "தமிழ்நாட்டின் நலனில் அவ்வளவு அக்கறையுள்ள ஆளுநர் ஏன் #பாலியல்பாஜக தலைவர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்க ,பாஜகவின் 15 பாலியல்குற்ற வீடியோக்களைப் பற்றி தெரிந்துகொள்ளக்கூடாது. ஆளுநர் அவருடைய எல்லையைத் தாண்டுவது தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்காது" என்று பதிவிட்டுள்ளார்.
கண்டனம்
சமீபத்தில், கொடநாடு விவகாரத்தை காங்கிரஸ்தான் சட்டசபையில் எழுப்பியது.. அதேபோல, தமிழக பாஜக தலைவர்கள் குறித்த பிரச்சனைகளிலும் திமுகவை விட காங்கிரஸ்தான் முந்திக் கொண்டு வந்து கையில் எடுத்து, கண்டனங்களையும் தெரிவித்தது.. போலீஸிலும் அவைகள் குறித்து காங்கிரஸ் தரப்பில் புகார்கள் தரப்பட்டன.. அவைகளில் ஜோதிமணியே ஒருசில புகார்களை நேரடியாக தந்துள்ளார்.. அந்த வகையில்தான் இப்போதும் கண்டனத்தை ஜோதிமணி ட்வீட் போட்டு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.. எனினும், ஆளுநர் ரிப்போர்ட் கேட்டது தொடர்பாக, இன்றுவரை திமுக மேலிடம் வாய் திறக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.