அதிமுக குறித்து நான் அப்போதே சொன்னேன்.. அது இப்போது நடந்திடும் போலயே.. கார்த்தி சிதம்பரம்
சென்னை: நான் அப்போது சொன்னது இப்போது நடக்கும் போலயே என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திமுக கூட்டணியுடன் எங்கள் கட்சி அனைத்து தேர்தல்களிலும் அமோக வெற்றி பெறும்.
அதிமுக ஒற்றை தலைமையுடன் செயல்பட்டு வருவதுதான் பழக்கம். சசிகலா தலைமையில் அதிமுக செல்லும் என எனது அரசியல் பார்வையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினேன். அது நடக்கும் போல இருக்கிறது.

அதிமுகவில் சசிகலா
எனவே சசிகலாவுடன் அதிமுக ஒன்று சேர்வதால் பலம், இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது எல்லாம் தெரியாது. மாற்று அணி, எதிர்க்கட்சிகளில் என்ன நடந்தாலும் எங்களுக்கு கவலை கிடையாது. அதிமுக ஒரு பெரிய கட்சி அவர்களுக்கான வாக்கு வங்கி இருக்கிறது. அதற்காக அதிமுகவுக்கு உள்ள வாக்கு வங்கியால் காங்கிரஸ் கட்சிக்கு பலம் இல்லை என்றாகிவிடாது.

மாநகராட்சி
எந்த மாநகராட்சியிலும் நகராட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடையாது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மாநகராட்சி மேயராக நகராட்சியில் தலைவராக வர வேண்டும் என்றால் பெரும்பான்மையான கட்சியான திமுக ஆதரவுடன்தான் வர வேண்டும்.

கும்பகோணம்
அப்படியிருக்கும் போது கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் மேயராக வரும் போது திமுகவை சேர்ந்தவர்களுக்கு ஏமாற்றம் என்பது வாடிக்கையான ஒன்றுதான். தமிழகத்தில் பெரிய, சிறிய கட்சிகள் கூட்டணி மூலமாக தான் தேர்தலை சந்திப்பது அரசியல் சாதுர்யமானது.

உக்ரைன் மருத்துவ மாணவர்கள்
உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே வேறு ஒரு நாட்டுடன் மத்திய அரசு பேசி, ஒப்பந்தம் போட்டு உக்ரைனில் படித்த மாணவர்களுக்கு மீண்டும் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications