பள்ளி மாணவிகள் கந்த சஷ்டி எப்படி பாடலாம்.. விசிக கண்டனம்.. பழமைப் பெண் திட்டமா என கிண்டல்
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பன் சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவிகளின் கந்தசஷ்டி கவசம் பாராயணம் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்தால் அமைச்சர் சேகர்பாபு பழமை பெண் திட்டத்தை செயல்படுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையின் புகழ்பெற்ற திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 120 பேர் பங்கேற்று தந்த சஷ்டி கவசம் பாடினர்.
இந்த நிலையில் பள்ளி கல்லூரி மாணவிகளை கந்த சஷ்டி கவசம் பாட வைத்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. அதே நேரத்தில் பழனி முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது எனவும் மாணவ மாணவிகளின் சம்மதத்தில் பேரிலேயே அவர்கள் பாடியதாக அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார்.
இதுதொடர்பாக விடுதலை நாளேட்டில் கேள்வி எழுப்பப்படிருந்தது. அதில்," தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தென்மாவட்டத்தில் நடத்தப்படும் கல்லூரியிலிருந்து கந்த சஷ்டி கவசம் பாட முருகன் கோயிலுக்கு மாணவர்/மாணவிகளை அனுப்ப வேண்டும் என்று துறையின் அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக ஒருசெய்திவருகிறது. கல்லூரிநடத்தப்படுவது எந்தத்துறையால் என்றாலும், மாணவர்கள் வந்திருப்பது கல்வி கற்கத்தானே ஒழிய, பஜனை செய்ய அல்ல தேர்வுக் காலம் என்றாலும், மற்ற நேரங்கள் என்றாலும் மாணவர்களை இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்கக் கட்டாயப்படுத்துவதா?

அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படும் மேலும் சில பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் பாராயணம் செய்ய வைக்க முயல்வதாகச் செய்திகள் வந்துள்ளன. திராவிடர் கழகத் தலைவர் (27.08.2024) உள்ளிட்ட பல தரப்பாரின் கடும் கண்டனத்துக்கு உள்ளானதும், தி.மு.க.வினாலேயே ஏற்க முடியாததுமான சில தீர்மானங்களைச் செயல்படுத்தும் முனைப்பாகவே இத்தகைய நடவடிக்கைகள் அமையவில்லையா?
திராவிட மாடல் அரசின் கொள்கை செயல் திட்டங்களுக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது யார் என்ற கேள்வி எழவில்லையா? அரசின் கல்விக் கூடங்கள் மதச்சார்பற்ற தன்மையில் நடக்க வேண்டும். பக்தியை வளர்ப் பதும் கட்டாயப்படுத்திமாணவர்களைப் பாராயணம் செய்விப்பதும் அற நிலையத் துறையின் வேலை அல்ல என்பதை அழுத்தந்திருத்தமாக நினைவூட்ட விரும்புகிறோம்." என கூறப்பட்டிருந்தது.

இதனை பகிர்ந்துள்ள விசிக எம்பி ரவிக்குமார் புதுமைப் பெண்' திட்டத்துக்கு எதிராகப் 'பழமைப் பெண்' திட்டமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"தமிழ்நாட்டில் அதிக அளவில் பெண்கள் கல்லூரிக்குப் போகவேண்டும் என்பதற்காக 'புதுமைப் பெண்' திட்டத்தைச் செயல்படுத்துகிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அவரது நல்ல நோக்கத்துக்கு மாறாக பள்ளி மாணவிகளைப் பாராயணம் பாடச் சொல்லி ' பழமைப் பெண்' திட்டத்தைச் செயல்படுத்துகிறார் மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு அவர்கள். கல்வியின் மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் 'அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் பள்ளி, கல்லூரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று கேட்பது தவிர வேறு வழியில்லை." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications