அதே ஜாம்நகர்.. சரித்திரத்தை மீண்டும் எழுதும் முகேஷ் அம்பானி.. மாபெரும் அறிவிப்பு!
செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் பெரும்பாலான நிறுவனங்கள் புதிய சாட்பாட்கள், லேங்வேஜ் மாடல்கள் மற்றும் பயனர் சேவைகளை அறிமுகப்படுத்தும் போட்டியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் முற்றிலும் வேறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்துக்கான அடிப்படை கட்டமைப்பையே உருவாக்கும் திட்டத்தை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் 49-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் மிக முக்கியமான அறிவிப்பாக மாறியுள்ளது.

"ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ்" திட்டம் என்ன?
ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, "செயற்கை நுண்ணறிவின் செலவுக் கட்டமைப்பையே மாற்றி, இந்தியாவில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் மலிவாகவும், பரவலாகவும் கொண்டு வருவதற்காக ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, ஜாம்நகரில் இந்தியாவின் "சவ்ரின் AI" (Sovereign AI) அடித்தளத்தை உருவாக்கும் பணியில் ரிலையன்ஸ் இறங்கியுள்ளது. இந்தியாவில் உருவாகும் தரவுகள் இந்தியாவிலேயே சேமிக்கப்பட்டு, இந்திய தேவைகளுக்கேற்ப செயற்கை நுண்ணறிவு சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.
ஜாம்நகரில் உலகத் தர AI உள்கட்டமைப்பு
ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி இக்கூட்டத்தில் பேசிய போது, ஜாம்நகரில் அமைக்கப்படும் இந்த AI மையம் முழுமையாக கிரீன் எனர்ஜி மூலம் இயக்கப்படும். கச்ச் பகுதியில் ரிலையன்ஸ் உருவாக்கி வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களிலிருந்து கிடைக்கும் சூரிய மின்சாரம் இந்த ஏஐ மையத்திற்கு வழங்கப்படும்.
முதல் கட்டமாக 120 மெகாவாட் திறன் கொண்ட AI கணினி உள்கட்டமைப்பு 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அதிநவீன NVIDIA GB300 வகை கிராபிக்ஸ் செயலி (GPU) அமைப்புகளும் நிறுவப்பட உள்ளன.
22 இந்திய மொழிகளிலும் AI சேவைகள்
செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஆங்கில மொழி தெரிந்தவர்களுக்கே மட்டுப்படக்கூடாது என்ற நோக்கத்தில், 22 இந்திய மொழிகளில் செயல்படும் AI சேவைகளையும் ரிலையன்ஸ் உருவாக்கி வருகிறது.
இதன் மூலம் மாணவர்கள், விவசாயிகள், சிறு தொழில்முனைவோர், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது தாய்மொழியிலேயே AI சேவைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.
ஏன் "சவ்ரின் AI" மீது கவனம்?
சமீப காலங்களில் டேட்டா பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடு தொடர்பான விவாதங்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வங்கிகள், மருத்துவத் துறை, அரசு சேவைகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்களது தரவுகள் எந்த நாட்டில் சேமிக்கப்படுகின்றன, அந்த AI மாடல்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
இந்த சூழலில், இந்தியாவுக்கென தனித்துவமான AI உள்கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியாக ரிலையன்ஸ் இறங்கியுள்ளது. சமீபத்தில் ஆந்திரோபிக் நிறுவனத்தின் fable 5 ஏஐ மாடலை வெளிநாட்டு மக்களுக்கு மொத்தமாக அமெரிக்க அரசு முடக்கியது. இந்த நிலை நாளை அடிப்படை ஏஐ சேவைக்கு கூட தடை வரலாம்.
இப்போது இந்தியாவில் சொந்த ஏஐ மாடல் இல்லையே என்ற நிலை வரக்கூடாது என்பதற்காக ரிலையன்ஸ் இதில் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications