தாம்பரம் மாநகராட்சி எடுத்த சூப்பர் முடிவு.. வாகன ஓட்டிகளுக்கு இதுதான் ரியல் நல்ல செய்தி
சென்னை: சென்னை புறநகரான தாம்பரம் பகுதியில் சாலையோரங்களில் புற்றீசல் போல் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை அகற்ற குழு அமைத்து தாம்பரம் கமிஷனர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை அடுத்து உள்ள தாம்பரம், சென்னைக்கு நிகராக வளர்ந்துவிட்டது.. ஒரு காலத்தில் சென்னையின் நுழைவு வாயிலாக இருந்த தாம்பரம், இன்றைக்கு சென்னையின் மையப்பகுதியில் உள்ள நகரமாக மாறி உள்ளது. சென்னையின் நுழைவு வாயில் என்பது இப்போது செங்கல்பட்டு என்கிற அளவிற்கு தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை வளர்ந்துவிட்டது..

தாம்பரம் மாநகராட்சியை பொறுத்தவரை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின்னர் தாம்பரத்தை சுற்றியிருந்த பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம் சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் தாம்பரத்துடன் இணைக்கப்பட்டன. மொத்தமாக ஐந்து நகராட்சிகள், ஐந்து பேரூராட்சிகள் தாம்பரத்துடன் இணைக்கப்பட்டன. தாம்பரம் மாநகராட்சியில் தற்போது 7200 சாலைகள் இருக்கின்றன.
தாம்பரத்தை பொறுத்தவரை 2013ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 10 வருடங்களில் கற்பனையிலும் எட்டாத அளவிற்கு வளர்ந்துள்ளது. குறிப்பாக தாம்பரத்தை ஒட்டி குரோம்பேட்டை, சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் அதிகரித்துள்ளது. இங்கு சென்னையின் ஒரு பகுதி மக்கள் வசிக்கிறார்கள், கிட்டத்தட்ட 20 லட்சம் என்கிற அளவிற்கு தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் வகிக்கிறார்கள்.. தினமும் பல லட்சம் மக்கள் சென்னை நகருக்குள் வந்து செல்லும் வழித்தடமாக இருக்கிறது.
இந்நிலையில் பொதுமக்கள் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு சாலையில் வாகன நெருக்கம் அதிகமாக உள்ள நிலையில், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளின் எண்ணிக்கை புற்றீசல் போல் அதிகரித்துள்ளது. குறிப்பாக சண்முகம் சாலை, ராஜாஜி சலை, காந்தி சாலை, அப்துல் ரசாக் சாலை, முத்துலிங்கம் முதலி சாலை, வெங்கடேசன் சாலை, பல்லாவரம் திருநீர்மலை, சி.எல்.சி, ராதா நகர் பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கிறது..
தாம்பரம்- வேளச்சேரி சாலை, முடிச்சூர் சாலை, பல்லாவரம் குன்றத்தூர் சாலைகளில் வாகன நெரிசல் ஒருபுறம் எனில், சாலையோர கடைகளால் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் அடிக்கடி ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் நிலையில், அதனை நிரந்தரமாக தடுக்க முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை ஒழுங்குபடுத்த வசதியாக ஐந்து மண்டலத்திற்கும் தனித்தனியாக குழு அமைத்து மாநகராட்சி கமிஷ்னர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார். இந்த குழு ஒவ்வாரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழன் அன்று சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications