நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்.. திருமாலின் 4 நிலைகளை போல் பணியாற்றிய ஸ்டாலின்
Recommended Video
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினின் வெற்றியை திருமாலின் 4 நிலைகளுடன் ஒப்பிட்டு தலையங்கம் தீட்டியுள்ளது முரசொலி.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து முரசொலியில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறுகையில் பாடலாசிரியர் இலட்சுமண தாஸ் " உழைப்பதிலா, உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாகும் என்றே நீ சொல் என் தோழா என ஒரு பாடலின் மூலம் கேட்டார்.
திமுக தலைவர் ஸ்டாலின் உழைப்பதில்தான் இன்பம் என்றும் அதில்தான் வெற்றியின் உள்ளடக்கம் இருக்கிறது என்றும் நடந்து முடிந்த தேர்தல்களில் கழகம் பெரு வெற்றியைப் பெற்றுவிட்டதன் மூலம் நிரூபித்துவிட்டார். ஆக உழைப்பின் வெற்றியைத் தமிழகத்தில் ஜனநாயகத்தின் வழி அவர் பிரகடனப்படுத்திவிட்டார்.
ஸ்டாலினின் தேர்தல் பணியை பாராட்டிய முரசொலி! #DMK pic.twitter.com/65ua38AQ01
— Oneindia Tamil (@thatsTamil) May 27, 2019

பேச்சுவார்த்தை
மதச்சார்பின்மையை வலுப்படுத்துகிற கூட்டணி அமைப்பதில் எந்த ஒரு கட்சி ஆனாலும் அக்கொள்கையோடு உடன்பட்டவைகளோடுதான் ஸ்டாலின் அக்கறையை காட்டினார். பேச்சுவார்த்தையில் விட்டுக் கொடுக்கிற நிலைகள் உருவாகிற போது கழகம் தனது இருப்பிலிருந்து தொகுதி ஒதுக்கீடு செய்வதில் வெகு தாராளம் காட்டியது. கட்டமைப்பைக் கெட்டிப்படுத்தியது. திமுக கழகம் அணி வடிவமைக்கிற பணி நடைபெறத் தொடங்கியதற்கு பிறகே நமது எதிரணி பணியைத் தொடங்கியது.

இங்கிதம்
ஸ்டாலின் கவுரவம் பார்க்காமல் சந்திப்புகளை நடத்தினார். எவருக்கும் கிஞ்சித்தும் எந்தவித வேறுபாடுகளும் வந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். கூட்டணியில் சேர விரும்பி அணியில் பங்கு பெறாமல் போன கட்சிகளையும் இங்கிதமாகவே அவர் அணுகினார். கொடுப்பதற்கு அவருக்குத் தொகுதிகள் இல்லை. அவ்வளவே!

மக்களுடன் சந்திப்பு
தொகுதி பகிர்வில் நிறைவும் கூட்டணியின் இறுதி வடிவமும் மக்கள் நம்பிக்கையை பெறும்படியாக அமைந்திருந்தது. தாமாக முன் வந்து ஆதரவு அளித்த அத்துணை அமைப்புகளையும் இரு கரங்கள் நீட்டி வரவேற்றார். ஸ்டாலினின் பிரச்சார உத்தி எதிரிகளைச் செயல் இழக்க வைத்து விட்டது. கூட்டத்தில் பேசுவதோடு மட்டுமல்லாமல் அவர் வாகனத்திருந்து இறங்கி வீதிக்கு வந்து மக்களோடு மக்களாக அமர்ந்து பேசினார். சந்தித்தார்.

திருமாலின் நிலைகள்
பிரச்சினைகளை கேட்டார். அவர்களோடு உரையாடினார்.தேனீர் அருந்தினார். "நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்" என்று வைணவப் பெருமக்கள் திருமாலின் 4 நிலைகளைச் சொல்வதை போலவே கழகத் தலைவர் ஸ்டாலின் பணியாற்றினார்.

சட்டசபையில் 13
நாடாளுமன்றத்தில் 37 இடங்களைப் பெற்றிருக்கிறோம். சட்டசபையில் 13 இடங்களை பெற்றுள்ளோம். கடந்த தேர்தலில் நமக்கு ஓர் இடம் கூட நாடாளுமன்றத்தில் இல்லை. சென்ற முறை நாடாளுமன்றத்தில் அதிமுக பெற்ற எண்ணிக்கையை நாம் அப்படியே பெற்று இருக்கிறோம் என்று முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications