முரசொலி செல்வம் மறைவு! கண்களில் சோகம்..இறுதி அஞ்சலி செலுத்திய தயாளு அம்மாள்! சோகக் கடலான கோபாலபுரம்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் நெருங்கிய உறவினரும் முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் காலமான நிலையில், அவருக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயாரும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் முரசொலி செல்வத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக முரசொலி உள்ளது. எனது மூத்த பிள்ளை என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியால் கொண்டாடப்பட்டது தான் முரசொலி பத்திரிகை.

அந்த அளவுக்கு திமுகவினரின் முக்கிய அங்கமான முரசொலியின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர் முரசொலி செல்வம். 84 வயதான இவர் கலைஞர் கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தராம்பாளின் மகன்தான் முரசொலி செல்வம்.
தொடர்ந்து தனது மகள் செல்விக்கு முரசொலி செல்வத்தையே கலைஞர் கருணாநிதி திருமணம் செய்து வைத்தார். முரசொலியின் ஆசிரியராக இருந்ததால் 'முரசொலி செல்வம்' என்றே அழைக்கப்பட்டு வந்த செல்வம் தனது மனைவி செல்வியுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மைத்துனரான முரசொலி செல்வம், அவருக்கு மிகவும் நெருக்கமானவர். மேலும் கலைஞர் குடும்பத்தினரின் வழிகாட்டி போல் இருந்தவர்.
மேலும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தம்பியான இவர் திரைப்படத் துறையிலும் தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற பெயரில் இவர் எழுதும் கட்டுரைகளுக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். தொடர்ந்து முரசொலிக்கு கட்டுரைகளை எழுதி வந்த அவர் அதனை எழுதியதற்கு பின்னே மரணம் அடைந்திருக்கிறார். நேற்று காலை பெங்களூருவில் முரசொலி செல்வம் கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார்.
அப்போது லேசாக கண் அயர்ந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயரிழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூரில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது உடலுக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆன மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்பி கனிமொழி, தயாநிதிமாறன், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர் பாபு, பொன்முடி, கே =என் நேரு, மா. சுப்ரமணியன், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகர்கள் சரத்குமார், ராதிகா, கவிஞர் வைரமுத்து, சத்யராஜ் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும் முரசொலி செல்வத்தின் மைத்துனருமான முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெளிநாட்டில் இருப்பதால் முரசொலி செல்வத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இதை அடுத்து அவரது சகோதரியும் முரசொலி செல்வத்தின் மனைவியுமான செல்வியிடம் வீடியோ காலில் பேசிய அழகிரி உடைந்து கண்ணீர் மல்க கதறி அழுதபடி பேசினார்.
இந்த நிலையில் முரசொலி செல்வத்தின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாரும், முரசொலி செல்வத்தின் மாமியாருமான தயாளு அம்மாள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். தற்போது அவர் வயது மூப்பு காரணமாக ஓய்வெடுத்துவரும் நிலையில் வீல்சேரில் அமர்ந்து வந்து முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முரசொலி செல்வத்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications