“இது ஆணவம்”.. மனோபாலா மறைவுக்கு இளையராஜாவின் இரங்கல்! சர்ச்சையான “அந்த” விசயம் -நெட்டிசன்கள் விவாதம்
சென்னை: இயக்குநர் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டு உள்ள வீடியோவில் அவர் ஆணவத்துடன் பேசி உள்ளதாக ஒரு தரப்பினர் விமர்சனங்களை முன்வைக்க மறுதரப்பினர் அதை மறுத்து வருகிறார்கள்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா நேற்று கல்லீரல் பிரச்சனையின் காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பி ஓய்வில் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருவதுடன் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், "என் மீது மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் கொண்டிருந்த நண்பரும் நடிகரும் இயக்குநருமான மனோபாலா காலமான செய்தியை கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். ஆரம்பத்தில் மனோ பாலா பத்திரிகையாளராகவும் அதன் பின்னர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.
பிறகு சொந்தமாக படங்களை இயக்கினார். என்னை எல்லா காலங்களிலும் சந்தித்து வருபவர் மனோபாலா. அதன் பிறகு அவர் இயக்குநரானாலும் நடிகரானாலும், அடிக்கடி வந்து ரெக்கார்டிங் சமயத்தில் அனைத்து விசயங்களையும் சொல்லி என்னை மகிழ்ச்சியடைய செய்வார்." என்று பேசி இருந்தார்.
இளையராஜா தனது இரங்கல் குறிப்பில் மனோபாலாவுக்கு தனக்கும் இருக்கும் தொடர்பை விளக்க முற்பட்டு இருக்கும் சூழலில், அதில் அவர் சொன்ன ஒரு விசயம், அவரது வீடியோவை பார்த்தவர்களுக்கு விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆம், "வீட்டில் இருந்து நான் கிளம்பி கோடம்பாக்கம் மேம்பாலத்தை தாண்டும் நேரத்தில் நான் வரும் நேரத்துக்காக பாலத்தில் காத்திருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர்.' என்று இளையராஜா சொன்னதை விவாதப் பொருளாகி இருக்கிறது.
அந்த காலத்தில் இசையில் இளையராஜா கொடிகட்டிப் பறந்தபோது அவரது பெயரை திரைப்பட போஸ்டரில் பெரிதாக அச்சடித்தாலே ரசிகர்கள் வரும் நிலையெல்லாம் இருந்தது என்பார்கள். இன்றும் கூட விடுதலை திரைப்படத்தில் இளையராஜாவின் பின்னணி இசையும், பாடலும் ரசிகர்களை கவரவே செய்து இருக்கின்றன. இசையில் முடிசூடா மன்னர் இளையராஜா என்று யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
ஆனால், ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும்போதும் கூட தற்புகழ்ச்சி அவசியமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்புகிறார்கள். சினிமாவில் தற்போது கொடிகட்டிப் பறந்து வரும் இளையராஜா உள்ளிட்ட எல்லோருமே ஏதோ ஒருவகையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள்தான். அவர்கள் அப்போது பட்ட அவமானங்களை மரணித்த பிறகு சுட்டிக்காட்டுவது அவர்களின் சுயமரியாதையை சீண்டும் செயல் என்ற குரல்களும் ஒலிக்கின்றன.
இந்த வீடியோவில் இளையராஜா பெருமை பேசியதாகவும் இது ஆணவம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரம், இளையராஜா மனோபாலா உடனான முதல் சந்திப்பையே நினைவுகூர்ந்ததாகவும், இதில் எந்த ஆணவமும் பெருமையும் இல்லை என்ற கருத்துகளையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இளையராஜா மீது அரசியல் ரீதியான விமர்சனங்களையே சிலர் தெரிவித்து வருவதாகவும், அவர் என்ன சொன்னாலும் சிலர் குறை சொல்வதை வாடிக்கையாக கொண்டு இருப்பதாகவும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இப்படி மனோபாலா மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் விவாதமாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications