“RSS = BJP = NTK”.. முஸ்லிம், கிறிஸ்துவர்களை சாடிய சீமான்! எங்கும் எதிர்ப்பு அலை - தலைவர்கள் கண்டனம்
சென்னை: இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் சாத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மணிப்பூரில் குகி பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.

"நாம் நினைத்துக்கொண்டு உள்ளோம். இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால், அவை சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து விட்டார்கள்.
இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியதே இஸ்லாமியர்களும், கிறிஸ்துவ மக்களும்தான். திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் 18 விழுக்காடு வாக்குகளை போட்டு போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள்தான்." என்று தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு ட்விட்டரில் இந்த வீடியோ ரீடுவீட் செய்து, "அதிலென்ன சந்தேகம்? மணிப்பூரில் நடப்பது பாஜகவின் இந்துத்துவ
இனப்படுகொலை. முஸ்லீம் கிறித்தவர்களுக்கு எதிரான திட்டமிட்ட
இனப்படுகொலை. இதற்கு பொறுப்பேற்க வேண்டியது பாஜக அரசா?முஸ்லீம் - கிறித்தவர்களா? திரு.சீமானின் இந்த கருத்து RSS கருத்தே." என்று குறிப்பிட்டு உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கனகராஜ் ட்விட்டரில் சீமான் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிராக பேசிய வீடியோவை பகிர்ந்து. "மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களைக் 'கண்டித்து' நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் 50 நிமிடம் பேசியிருக்கிறார். அதில் அவர் மணிப்பூர் வன்முறைகளைக் கண்டித்து பேசியதை கண்டுபிடிப்போருக்கு பாராட்டுகள்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். -

தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை அணி மாநில துணை தலைவர் ஆலிம் அல் புகாரி இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "உன் கேவலமான கட்சி கொள்கைகள் புடிக்காம ஓட்டு போடாட்டி நாங்கள் எல்லாம் சாத்தானின் பிள்ளைகளாடா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
நாகை திருவள்ளுவனின் தமிழ் புலிகள் கட்சி ட்விட்டர் பக்கத்தில், "இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் சாத்தானின் குழந்தைகளாகி பல ஆண்டுகள் ஆகிடுச்சி! இந்த நாட்டில் நடக்கும் அநீதி, அக்ரமத்திற்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள்தான். RSS = BJP = NTK" என்று குறிப்பிட்டு விமர்சித்து உள்ளது.

இதுகுறித்து திராவிட இயக்க தமிழர் பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜா சுந்தர்ராமன் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "பாஜகவின் அகண்ட பாரதத் தலைமை, சொல்ல அஞ்சுகிற ஒரு ஆகாசப் புளுகை, பாசகவின் தமிழ்த்தேசிய அரசியல் பிரிவு தலைவர், செந்தமிழன் சீமான் அவர்கள் அவிழ்த்துவிட்டு, தம்பிகளின் கைத்தட்டலை வாங்கும் காட்சி! இஸ்லாமிய, கிருத்தவ அன்பர்களே, நாதக வில் இனி தங்களுக்கு என்ன வேலை என சிந்திப்பீர்!" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.













Click it and Unblock the Notifications