Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை கோயம்பேட்டில் மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம்கள் கடும் போராட்டம்.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள மசூதியை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? கடும் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் அருகே செக்டர் 3ல், 'மஸ்ஜித்-ஏ-ஹிதாயா' என்ற பள்ளிவாசல் அமைந்திருக்கிறது. இந்த இடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்குச் சொந்தமான இடமாகும். இந்த இடத்தில் ஏராளமான ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் மசூதி ஒன்று கட்டுமான ஒப்புதல் இல்லாமல் கட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதன் பேரில் கடந்த 2020ஆம் ஆண்டு அதிகாரிகளால் இந்த மசூதியின் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கப்பட்டது.

Chennai koyambedu mosque Muslim

ஆனால், அதை மீறி சட்டவிரோதமாக பள்ளிவாசல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மசூதி கட்டப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு இடம் என்று கூறி சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மசூதி ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்ததுடன், அதனை இடிக்குமாறு கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கோயம்பேடு மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அத்துடன், நடப்பு ஆண்டு மே 31ஆம் தேதியுடன் மசூதியை இடிக்க வேண்டும் என கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிவடைந்ததையடுத்து, ஜூன் 15ஆம் தேதிக்குள் மசூதியை இடித்துவிட வேண்டும் என காவல்துறை தரப்பிலிருந்து மசூதி நிர்வாகத்திற்கு கடிதம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து (செவ்வாய்க்கிழமை) கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி மசூதி இடிப்பிற்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

இது குறித்து கோயம்பேடு பள்ளிவாசல் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் அருகே செக்டர் 3ல்'மஸ்ஜித்-ஏ-ஹிதாயா' என்ற பள்ளிவாசல் செயல்பட்டு கொண்டு வருகிறது. முறைப்படி இந்த இடம் கிரையம் செய்யப்பட்டு, 43 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளோம். அதற்கு மேல் எங்கள் சமுதாய மக்களின் பணம் கொண்டு பள்ளி வாசல் கட்டப்பட்டது. முறைப்படியே எல்லாம் செய்துள்ளோம். இதற்கான வரிகளும் நாங்கள் இதுவரை சரியாக கட்டியுள்ளோம்.. சமூக விரோதிகள் சிலர் இந்த மசூதியின் மீது காழ்ப்புணர்வு கொண்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடைசியில் இந்த மசூதியை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது.

எந்த காரணம் கொண்டும் மசூதி என்பது இடிக்கப்படக்கூடாது என்பதை வேண்டி, இங்கு நாங்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம். இந்த மசூதி இடம் சிஎம்டிஏவுக்கான எந்த தேவையும் கிடையாது. இந்த மசூதி இருக்கும் நிலம் பேருந்து நிலையத்திற்குச் சொந்தமான இடம் என்று சொல்கிறார்கள்.

ஆனால், பள்ளிவாசலைச் சுற்றி 200 குடும்பங்கள் குடியிருக்கின்றன. ஆனால் மசூதியை மட்டும் ஆக்கிரமிப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் ஆக்கிரமிக்கப்பட்ட இடமும் கிடையாது. இதற்கு முன்பு முறைப்படி கையகப்படுத்தப்பட்ட இடமும் கிடையாது. கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டும் போதும் ,இந்த இடம் கையகப்படுத்தப்படவில்லை.. இங்கு மதில் சுவர் இருக்கிறது. கோயம்பேடு பேருந்துநிலையத்தின் பின்புறம் தான் இந்த மசூதி இருக்கிறது.

கோயம்பேடு பேருந்து நிலையம் மசூதிக்கு இடையே நிறைய நிலப்பகுதிகள் இருக்கிறது. மிகவும் சொற்பமான இந்த இடத்தை எடுத்து சிஎம்டிஏ எதுவும் செய்யவும் முடியாது. இந்த இடத்தை கையகப்படுத்தி, மசூதியை இடித்து, முஸ்லீம்களின் மத உணர்வில் வேரை பாய்ச்சக்கூடிய செயல் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு நினைத்தால், இந்த பள்ளிவாசல் இடிக்கப்படுவதில் இருந்து பாதுகாத்து மக்களிடம் கொடுக்கலாம். எனவே, இது குறித்து முதல்வர் ஸ்டாலின எங்களுக்கு ஆவணம் செய்ய வேண்டி கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு கூறினார்.

மேலும், போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை அடுத்து, பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+