மதமென பிரிந்தது போதும்.. சென்னை சர்ச்சில் ரம்ஜான் முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை.. இதுதான் தமிழ்நாடு!
சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை ராயப்பேட்டை தேவாலயத்தில் இன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். ஒரு மாதம் வரை நோன்பு இருந்து இஸ்லாமியர்கள் ரம்ஜானை கொண்டாடுவார்கள். மேலும் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு இருப்பது. இதனால் ரம்ஜான் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது.

இந்த பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் தங்களின் புனித மாதமான ரமலானில் நோன்பை கடைப்பிடிப்பார்கள். ஒரு மாதம் வரை இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சாயங்காலம் வரை உணவு உண்பதை தவிர்த்து உடலை வருத்தி நோன்பு இருப்பார்கள்.
இந்த காலக்கட்டத்தில் அதிகாலையில் அவர்கள் எடுத்து கொள்ளும் உணவு சஹர் என அழைக்கப்படும். அதன்பிறகு மாலையில் நோன்பு திறப்பதை இப்தார் என்பார்கள். இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பிறை பார்க்கப்பட்டது. இதையடுத்து இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஈத்கா மைதானங்ளில் ஏராளமானவர்கள் குவிந்து தொழுகை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னையில் உள்ள தேவாலயத்தில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் புனித காணிக்கை அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தின் வளாகத்தில் இன்று காலை இஸ்லாமியர்கள் கூடி சிறப்பு தொழுகை நடத்தி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். சமீபகாலமாக நாட்டில் சில இடங்களில் மதம் சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் தான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காணிக்கை அன்னை தேவாலயத்தில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications