2 குழந்தைங்க தனியா இருப்பாங்க.. ரிமாண்ட் செய்த நீதிபதி.. ஜாமீன் கேட்டு மீண்டும் கோர்ட் போன கஸ்தூரி
சென்னை: சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன் பேரில் கஸ்தூரி, புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரமாக அவர் சிறையில் உள்ள நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக 2 குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பாங்க.. நான் சிங்கிள் மதர் என்று கூறி வாதம் வைத்து இருந்தார் கஸ்தூரி. இப்படிப்பட்ட நிலையில்தான் அவர் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டார்.

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி நேற்று முதல்நாள் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார். தெலுங்கர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் எழும்பூர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் முன்பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் தலைமறைவாகி இருந்தார். அவரை பிடிக்க இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், "300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது.. எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்?'' என்று பேசியிருந்தார்.
முன்னதாக நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது. தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான், அவர்களை எப்படி பிரித்துப் பேச முடியும் என்று குறிப்பிட்டார். கஸ்தூரி பேசிய காணொளி நீதிபதி முன்பு ஒளிபரப்பப்பட்டது.
அரசுத்தரப்பு: கஸ்தூரி திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். முன் ஜாமீன் வழங்கக்கூடாது
நீதிபதி: எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?
அரசுத்தரப்பு: 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
கஸ்தூரி தரப்பு: குறிப்பிட்ட சமூகத்தினரைக் கொண்டு மட்டும் அந்த கூட்டம் நடக்கவில்லை.
தொடர்ந்து கஸ்தூரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரியதை தொடர்ந்து விசாரணை சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீதிபதி: குறிப்பிட்ட சமூகப் பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் எனக் குறிப்பிட்டு ஏன் கஸ்தூரி கூறினார்? அதற்கான அவசியம் என்ன?
கஸ்தூரி தரப்பு: தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார். இதற்காக காவல்துறை அவரை தேடத் தேவையில்லை
அரசுத்தரப்பு: கஸ்தூரி திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்றே அவர் இப்படி எல்லாம் கூறி உள்ளார்.
நீதிபதி: அவர் பேசியது தேவையற்றது. கற்றவர், சமூக ஆர்வலர் என தன்னைக் கூறும் மனுதாரர் எப்படி இப்படி கருத்தை தெரிவிக்கலாம்?
அந்த வீடியோக்களை பிறர் பார்க்கையில் தேவையற்ற விளைவை ஏற்படுத்தும்தானே?. மன்னிப்பை உணர்ந்து கேட்டதாக தெரியவில்லை. தான் கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாகவே உள்ளது
அரசுத்தரப்பு: கஸ்தூரி சாதாரணமாக பேசவில்லை. இரண்டு மாநிலங்களுக்கு இடையே பிரிவினையையை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இப்படி பேசியுள்ளார். பிரச்சனை ஏற்படுத்த வேண்டும்.. சதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இப்படி எல்லாம் பேசி உள்ளார் என்று தமிழக அரசு வாதம் வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications