என் வாழ்க்கையே ஒரு சவால்தான்... நான் நிச்சயம் ஜெயிப்பேன் - குஷ்பு நம்பிக்கை
என்னை வாழ்க்கையே ஒரு சவால்தான். நான் நிச்சயம் தேர்தலில் ஜெயிப்பேன். என்னை வாழவைத்த மக்கள் என்னை ஜெயிக்கவும் வைப்பார்கள் என்று நம்புகிறேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை: என் வாழ்க்கையே ஒரு சவால்தான். சவால்களில் நிச்சயம் நான் ஜெயிப்பேன் என்று ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு கூறியுள்ளார். என்னை வாழவைத்த மக்கள் என்னை ஜெயிக்கவும் வைப்பார்கள் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் நடிகையுமான குஷ்பு இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

முதன்முறையாக போட்டி
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முதன்முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கட்சி பேதமின்றி அனைவரும் ஊர்வலமாக வந்து ஆதரவு கொடுத்துள்ளனர்.

வெற்றி வாகை சூடுவேன்
ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறுவது சவாலான விசயமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகை குஷ்பு. சவால்களில் ஜெயிப்பது எனக்கு பிடிக்கும் என் வாழ்க்கையே மிகப்பெரிய சவால்தான் என்று சொன்னார்.

மக்கள் முடிவு செய்வார்கள்
முன்னதாக நிர்வாகிகள் மத்தியில் நேற்று பேசிய குஷ்பு மிகவும் உருக்கமாக கண் கலங்க பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு தன்னுடைய வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தார். ஆயிரம் விளக்கு தி.மு.க.வின் கோட்டை என்று கூறுவதே கேலியாக உள்ளது. அப்படி நினைத்திருந்தால் மு.க.ஸ்டாலின் எதற்கு கொளத்தூருக்கு ஓடினார்? எத்தனை பேர் போட்டியிட்டாலும் நல்லவர் யார்? என்பதை மக்களே முடிவு செய்வார்கள் என்றும் சொன்னார்.

பிரச்சினைகள் தீர்க்க வேண்டும்
இந்த தொகுதியை பொறுத்தவரையில் குடிநீர் தட்டுப்பாடு, கழிவுநீர் பிரச்சினை இருக்கிறது. இதை தீர்த்து வைத்தாலே போதும் என்று சொன்ன குஷ்பு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பொறுப்பாளராக எனது கடமையை சரியாக செய்துள்ளேன் என்றார். ஆயிரம் விளக்கு எனது தொகுதியாக இருந்தாலும் அடிக்கடி அங்கும் சென்று மக்களை சந்திப்பேன்.

மக்கள் ஆதரவு
திமுக தேர்தல் அறிக்கையை கதாநாயகன், கதாநாயகி என்று மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். உண்மையான கதாநாயகி நான் தான் என்று மக்கள் எப்போதோ கூறிவிட்டனர் என்று சொன்ன குஷ்பு. பல விஷயங்களில் ஸ்டாலின் பின்வாங்கி வருகிறார். நிறைய விஷயங்களை இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்.

வாழவைத்த மக்கள்
முதல் தடவை போட்டியிடுகிறேன் என்பதால் வெற்றிபெற கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறேன். வெற்றிக்கொடியை எட்டிப்பறிக்க போராடி வருகிறேன். என்னை வாழவைத்த மக்கள் என்னை ஜெயிக்கவும் வைப்பார்கள் என்று நம்புகிறேன் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications