அம்மாவை காணோம்.. காடுவெட்டி குருவின் மகன் வீடியோவால் பரபரப்பு
என் அம்மாவை காணவில்லை என்று காடுவெட்டி குரு மகன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: "என் அம்மாவை சொந்தக்காரங்க கிட்ட இருந்து எப்படியாவது மீட்டு தந்துவிடுங்கள்" என்று மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஒரு பரபரப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மறைந்த காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா கையெழுத்திட்ட கடிதம் ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு இணையத்தில் வேகமாக பரவியது. ஆனால் எங்க அம்மாவுக்கு எழுத படிக்கவே தெரியாது என்றும், அந்த கடிதமே பொய் என்றும் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் தெரிவித்துள்ளார்.
மிரட்டல் கையெழுத்து
இது சம்பந்தமாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு, பாமக நிறுவனர் ராமதாசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார். அந்த வீடியோவில், அவர் தெரிவித்திருப்பதாவது: "2 நாள்களுக்கு முன்பு என் அம்மா கையெழுத்திட்ட கடிதம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. அது ஒரு பொய்யான கடிதம். என் அம்மாவுக்கு படிக்க தெரியாது. என் சொந்தக்காரர்கள் அவரை மிரட்டி கையெழுத்து வாங்கி வெளியிட்டு விட்டனர்.
பேச தயங்குகிறார்
என் அப்பா இறந்ததிலிருந்தே அம்மா மிகவும் மனவேதனையில் இருந்தார். அதனால அவங்களுக்கு ஆறுதலா இருக்கட்டும்னு சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் அவங்க பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். அப்போதிலிருந்து என்கிட்ட அவர் சரியாக பேசுவது இல்லை. போனில் பேசினாலும் தயங்கி தயங்கியே பேசுகிறார்.
கூப்பிட்டும் வரவில்லை
பிறகு எங்க அம்மாவின் கால் உடைந்துவிட்டது. காலை அவராக உடைத்து கொண்டாரா? அல்லது சொந்தக்காரகள் யாராவது தள்ளிவிட்டார்களா என்றும் தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் அவரை என்னுடன் யாரும் சரியாக பேசவே விடவில்லை. அம்மாவை சொந்தக்காரர்கள்தான் மிரட்டி அவங்க வீட்டில் சிறை வைத்து இருக்கிறார்கள். தீபாவளிக்கு கூப்பிட்டும் அவர் வரவில்லை.
எங்கே என தெரியவில்லை
ஊர் பெரியவங்கள வச்சும் பேசிப் பார்த்தேன். அப்போதும் அவர் என்னுடன் வரவில்லை. அம்மா இருக்கும் இடமான அருமபாக்கத்தில் உள்ள என் அண்ணன் வீட்டிற்கு சென்றேன். ஆனால் அம்மா அங்கே இல்லை. இதை பற்றி கேட்டதற்கு கேட்டால், திண்டிவனம் சென்றுவிட்டார், பாண்டிச்சேரி சென்று விட்டார் என்று கூறுகிறார்கள்.
ராமதாசுக்கு கோரிக்கை
அதனால் தற்போது ஒரு வாரமாக அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், என் அம்மாவை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வீடியோவில் பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.