என் ஆதரவு திமுகவுக்குத்தான்..! திடீரென்று மனம் மாறிய கஸ்தூரி..? என்ன நடக்கிறது?
சென்னை: நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த சனிக்கிழமை சீமான் பங்கேற்றுப் பேசிய நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் பாடல் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை எழுப்பி விவாதித்து வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி வந்தால், சென்னையில் புத்தகக் கண்காட்சி நினைவுக்கு வரும் அளவுக்கு அது ஒரு கலாச்சார அடையாளமாக மக்கள் மனதில் பதிந்து போய்விட்டது. பல லட்சம் புத்தகங்களை ஒரே இடத்தில் பார்க்கலாம் என்பதால் பொதுமக்கள் இங்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

புத்தகக் கண்காட்சி என்றால், கூடவே பல பேச்சாளர்களின் உரையும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். சிரிப்பு பேச்சாளர் முதல் சீரியஸான பேச்சாளர் வரை பலரும் தினந்தோறும் மாலை 6 மணிக்கு மைக் பிடித்து மக்களைக் கவரும்படி தங்களின் கருத்துகளை தொகுப்பு தோரணமாகக் கட்டி கவர்ந்துவிடுவார்கள்.
ஆனால், இந்த வருடம் சிரிப்பு பேச்சைவிட சீமானின் சீரியஸ் பேச்சு பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த் தாய் பாட்டு என்று சொல்லி பாரதிதாசனின் பாடலை பாடியுள்ளனர். அது புதுச்சேரி அரசின் தமிழ்த் தாய் பாடல். தமிழ்நாட்டின் தமிழ்த் தாய் பாடல் என்றால் அது 'நீராரும் கடலுடத்த' எனத் தொடங்குவதுதான். அதை மாற்றிப் பாடல் ஒலித்தது மட்டுமல்ல; புத்தக விழாவில் சீமான் திமுக அரசனை விமர்சிக்கும் ஒரு கட்சிக் கூட்டம் போல் மாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. அதை பபாசி அமைப்பு மறுத்துள்ளது. அவரது பேச்சில் உடன்பாடில்லை என அறிக்கை விட்டுள்ளது.
திமுக அரசையும் திராவிட கொள்கையையும் கடுமையாக விமர்சித்து சிறை வரை சென்ற நடிகை கஸ்தூரி இந்த விவகாரத்தில் சீமானின் செயல்பாட்டைக் கண்டித்துள்ளார். "இப்போதுதான் புதுச்சேரிக்கு ஒரு தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் இருக்கிறது என்பதையே அறிந்து கொண்டேன். நம் மாநில அரசு எதைச் சொல்லி இருக்கிறதோ அதைக் கடைப்பிடிப்பதுதான் சரி. அப்படிப் பார்த்தால் நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் பாடவேண்டும் என அரசாணை உள்ளது. அதற்காக வேறு நாட்டு தேசிய கீதத்தை இங்கே பாட முடியுமா?
எனவே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைத்தான் நானும் ஆதரிக்கிறேன். இந்தப் பாடலைத்தான் பாடவேண்டும் என்று அரசாணை இருக்கிறது" என்று பேசி இருக்கிறார்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நியாயத்தின் பக்கம்தான் நிற்கமுடியும் என்றும் திமுக அரசு செய்வது எல்லாம் தவறு என்று என்னால், அவமரியாதையான ஒரு செயலுக்கு முட்டுக் கொடுக்க முடியாது என்றும் அவர் பேசி இருக்கிறார்.
இதேபோல் சில மாதங்கள் முன்னதாக ஆளுநர் மாளிகையில் தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்றுள்ள சில வரிகளை நீக்கிவிட்டுப் பாடப்பட்டது. அதை திமுக அரசு கண்டித்தது. மறுநாள் ஆளுநர் ரவி அதற்கு விளக்கமளித்து முழு பாடலையும் பாடிக் காட்டினார். இப்படி திமுக ஆட்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் ஆளுநர் ரவி தொடங்கி சீமான் வரை பலரது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
சீமான் கலந்து கொண்டது அரசு விழா அல்ல. ஆனாலும் அரசு உதவியில் நடைபெறும் விழா. தனிப்பட்ட அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கும் விழாவாக இருந்து அதில், பாரதிதாசனின் பாடலைப் பாடி இருந்தால் அதை விமர்சிக்க முடியாது. பொதுமக்கள் பங்கேற்கும் விழாவில் சீமான் இதைச் செய்திருக்கக் கூடாது" என்றே கஸ்தூரி கூறியுள்ளார். அவர் இந்த ஆண்டு ' வேடர்கள் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்' என்ற புத்தகத்தை வாங்கி படிக்க உள்ளதாகச் சொல்லி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications