திமுக பேனரில் இல்லாத கலைஞர் படம்.. தொண்டர்கள் வேதனை
சென்னை: திமுகவை 50 ஆண்டுகாலம் கட்டிக்காத்து, தான் மறையும் வரை தமிழக அரசியலில் ஜாம்பவானாக இருந்த மறைந்த தலைவர் கருணாநிதியை மயிலாப்பூர் திமுகவினர் மறந்தது ஏனோ என தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டுச் சென்றுள்ளனர். நடவடிக்கை வருமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தான் மறையும் வரை திமுக தலைவராக பதவி வகித்த தொண்டர்களால் கலைஞர் என அழைக்கப்பட்ட கருணாநிதி, தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார். 13 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கருணாநிதி சட்டமேலவை உறுப்பினர், எதிர்க் கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் துணைத் தலைவர், அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் அமைச்சரவையில் பொதுப் பணித் துறை அமைச்சராகவும் கருணாநிதி அங்கம் வகித்திருந்தார்.

இலக்கியவாதி
அரசியல்வாதி, இலக்கியவாதி, கதை, திரைக்கதை, வசனகர்த்தா, நாடகாசிரியர், கவிதை ஆசிரியர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்தவர் கருணாநிதி. இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் காலூன்றி 5 தலைமுறை தலைவர்களை சந்தித்து அரசியல் செய்தவர். கருணாநிதி 1969 ஆம் ஆண்டு திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திமுக என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை தாண்டி திருவாரூர் முத்துவேல் கருணாநிதி என்ற அளவுக்கு பேசப்பட்டவர். அனைத்துமாக இருந்தவர்.

எதிர்க்கட்சியினர்
பின்னர் சட்டசபையில் எதிர்க்கட்சியினர் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து குறை கூறினால், "அந்த பிரச்சினை காலையிலேயே சரி செய்யப்பட்டுவிட்டது" என்பாராம். அந்தளவுக்கு மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்ப்பதில் வல்லவர். நிர்வாக திறமை மிக்கவர். இவரை தமிழக அரசியலின் சூப்பர்ஸ்டார் என சொல்லலாம். என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே என்று அவர் மேடையில் பேச முற்படும் போது தொண்டர்கள் ஆரவாரம் அடங்க நீண்ட நேரமாகும்.

அன்பு பிறப்புகளே
கடைசியாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது கூட அவர் எப்போது அன்பு உடன்பிறப்புகளே என சொல்வார் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அரசியலே வேண்டாம் என சொன்னவர்கள் எல்லாம் கருணாநிதியை பார்த்து அரசியலுக்கு வந்த வரலாறும் உண்டு. இத்தகைய கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நிலை பாதிப்பால் காலமானார்.

புகைப்படம்
அவர் மறைந்தாலும் அவரது புகைப்படத்தை விளம்பரங்கள், பேனர்களில் திமுக நிர்வாகிகள் மறக்காமல் பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்றைய தினம் கருணாநிதியின் புகைப்படம் இல்லாமல் ஒரு பேனரை கண்ட தொண்டர்களுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. மயிலை கிழக்கு பகுதி திமுக சார்பில் மக்களை தேடி மருத்துவம் தொடர்பாக வைக்கப்பட்ட பேனரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரின் புகைப்படத்தை அச்சிட்டிருந்தனர். உடன் மயிலைப்பகுதி நிர்வாகி, மாவட்டச் செயலாளர் த.வேலு படம் இருந்தது, ஆனால் தமிழக அரசியலிலும் திமுகவின் முகமாகவும் இருந்த கருணாநிதியின் படத்தை காணவில்லை. இதை பார்த்த தொண்டர்கள் வேதனையடைந்தனர். திமுகவில் பாதியாக மு.க இருக்கிறார் அவர் பெயர் சொல்லி நடக்கும் ஆட்சியில் படம் இல்லையா என வேதனை தெரிவித்துள்ளனர்.

தவிர்க்க முடியாத
தான் மறையும் வரை தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்த தலைவரின் படத்தை தங்கள் கட்சியின் பேனரில் தவிர்த்துள்ளனர் மயிலைப்பகுதி திமுகவினர் என தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முதல்வர் கவனத்துக்கு இது கொண்டுச் செல்லப்படுமா? என தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் கடந்த தேர்தலில் எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் அதிமுக மறந்து பிரச்சாரம் செய்ததால்தான் அந்த கட்சி தோல்வி அடைந்ததை என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே திமுகவினரின் இந்த செயல்பாட்டை முதல்வர் கண்டிக்க வேண்டும் என தொண்டர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications